2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழில் பெண்கள் செயற்பாட்டுக் குழுவினர் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அலேசியஸ் நிதர்சன், சுமித்தி தங்கராசா


வட, கிழக்கில் பணிபுரியும் பெண்கள் செயற்பாட்டுக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை  காலை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

'பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு' தொடர்பான விழிப்புணர்வு ஊர்தி கிளிநொச்சியிலிருந்து  யாழ்ப்பாணத்தை இன்று திங்கட்கிழமை வந்தடைந்தது.  இந்த நிலையில், யாழ். நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக பெண்கள் செயற்பாட்டுக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'பாலியல் பலாத்கார கொலைகளை எப்பொழுது இல்லாமல் ஆக்குவோம்?', '09 வயதுச் சிறுமி தெரிந்த நபரால் (67) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்' போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், யாழ். நாச்சிமார் கோவிலடியில் கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும்  மார்க்கண்டு லோகராணி (வயது 45) என்ற பெண்ணின்  சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக ஆணைக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.

இவரது வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையிலேயே  பெண்கள் செயற்பாட்டுக் குழுவினரும் யாழ். நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மேற்படி பெண்ணின் கொலை வழக்கை விசாரணை செய்த யாழ். நீதவான் நீதிமன்ற நீதிவான்  பொ.சிவகுமார்,  சந்தேக நபரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .