2025 ஜூன் 25, புதன்கிழமை

சுகாதார வைத்திய அதிகாரியை தாக்க முற்பட்டவர் கைது

Kanagaraj   / 2014 ஜனவரி 02 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியை பொலிஸார் முன்னிலையில் தாக்க முற்பட்ட கோணப்புலம் நலன்புரி நிலையத்தினைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் இன்று (02) தெரிவித்தனர்.

கோணப்புல நலன்புரி நிலையத்தில் 158 குடும்பங்களைச் சேர்ந்த 1500 பேர் வசித்து வருவதுடன்,  நலன்புரி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 18 மலசலகூடங்களை 10 குடும்பங்களுக்கு ஒரு மலசலகூடம் என்ற ரீதியில் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அங்கிருக்கும் வாசியொருவர் ஒரு மலசலகூடத்தினை தனது குடும்பத்திற்கும் தனது நெருங்கிய உறவுக்கார குடும்பம் ஒன்றின் பாவனைக்கும் மட்டும் எனக்கூறி பூட்டினால் பூட்டி வைத்துள்ளார். இதனால் ஏனைய 8 குடும்பங்களும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் சுகாதார நடைமுறைகளைப் பார்வையிடுவதற்காகவும், சிறுவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தினை நடத்துவதற்காகவும், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி, குடும்பநல உத்தியோகத்தர்கள், சுகாதாரத் தொண்டர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் தெல்லிப்பளை பொலிஸார் ஆகியோர் இன்று (02) நண்பகல் நலன்புரி நிலையத்திற்குச் சென்றனர்.

இதன்போது, குறித்த நபருடன் உரையாடி ஏனைய குடும்பங்களின் பாவனைக்காக மலசலகூடத்தினைத் திறந்துவிடும்படி சுகாதார வைத்தியதிகாரி கூறினார். இருந்தும், குறித்த நபர் சுகாதார வைத்தியதிகாரியினை பொலிஸார் முன்னிலையில் தாக்க முற்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேற்படி நபரைக் கைது செய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகப் பொலிஸர் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .