2025 ஜூன் 25, புதன்கிழமை

வடமாகாண மாணவர்களுக்கு சமத்துவமாக வளங்களை வழங்க கொள்கைத்திட்டம்: சர்வேஸ்வரன்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 08 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் பாகுபாடில்லாது சமத்துவமாக எல்லா வளங்களையும் எல்லா மாணவர்களும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் கொள்கைத்திட்டம் ஒன்று உருவாக்கப்படும் என வடமாகாணசபை உறுப்பினர் ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

கிராமப்புறம், நகர்ப்புறம் என்ற வேறுபாடின்றி நகர்ப்புற பாடசாலைகளிலுள்ள அனைத்து வசதி வாய்ப்புக்களும் கிராமப்புற பாடசாலைகளுக்கும் வழங்கும் வகையிலான கொள்கைத்திட்டத்தை உருவாக்கி செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ். குட்டியபுலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கற்கும் 385 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'தமிழர்கள் கல்வியறிவில் பல தசாப்த காலமாக பின்நோக்கியுள்ளனர். இந்த நிலையிலிருந்து நாங்கள் மீள வேண்டுமாக இருந்தால் மன உறுதிப்பாடு வேண்டும். எமது மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்துவதற்காக எம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
புலம்பெயர்ந்த எம் உறவுகள் கடும் குளிரிலும் பனியிலும் துன்பங்களின் மத்தியிலான உழைப்பின் ஒரு பகுதியை இன்று உங்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள். புலம்பெயர்ந்த எம் உறவுகளுக்கு நாங்கள் செய்கின்ற கைமாறு எமது பிள்ளைகளை சிறந்த கல்விமான்களாக்குவது தான்.

எமது பிள்ளைகள் வளப்பற்றாக்குறைகளுடன் கல்வியைத் தொடரும் நிலையில், மாணவர்களே இல்லாத சில பாடசாலைகளுக்கு பல மில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கப்படும் இனவாத ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

தமிழ் மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் மட்டுமன்றி, கல்வி வளங்களை திட்டமிட்டு அழித்த அரசு கல்வியில் எமது மாணவர்கள் மீண்டும் தலைதூக்கி விடக்கூடாது என்பதில் குறியாகவுள்ளது.

தமிழ் மாணவர்களின் கல்வியை சீரழிக்க வடக்கு, கிழக்கின் கல்வி நிர்வாகத்தை அரசியல் மயப்படுத்தியதுடன், கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளிலும் அவற்றை பயன்படுத்துவதிலும் வெளிப்படையான இனரீதியான பாரபட்சம் காட்டுவது கண்கூடு.

அரசின் இச்சதிகளையும் மீறி தமிழ் மாணவர்களின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் சமூக ஈடுபாடு கொண்ட ஆசிரியர்கள், அதிகாரிகளின் ஒன்றுபட்ட உழைப்பும் புலம்பெயர் உறவுகளின் தொடர்ச்சியான உதவிகளும் கல்வியில் கடைசி நிலையில் இருந்த யாழ்ப்பாண மாணவர்கள் இன்று முதலாம் இடம் நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றனர்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் எமக்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்து வடமாகாண சபையை உருவாக்கியுள்ளீர்கள். எனவே, உங்களால் உருவாக்கப்பட்ட வடமாகாண சபை உங்களின் கல்வி வளர்ச்சிக்காக வடமாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் சமமான முறையில் வளங்களை பங்கிடும்' என்றார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .