2025 ஜூன் 25, புதன்கிழமை

மூடிய அறைக்குள்ளிருந்து முடிவெடுக்கக்கூடாது – இரணைமடு விவசாயிகள்

Kogilavani   / 2014 ஜனவரி 16 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்


ஆய்வுகள், கள அனுபவங்கள், கலந்துரையாடல்கள் எதுமின்றி மூடிய அறைக்குள்ளிருந்து திட்டங்களைத் தீட்டி இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகத்திட்டம் வரையப்பட்டுள்ளது என இரணைமடு விவசாயிகள் சம்மேனத்தினர் தெரிவித்தனர்.

பாமர விவசாயிகளாகிய நாங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பகிரங்கமாக விளக்கம் அளிப்பதற்கு அதிகாரிகள்  தயாரில்லை என்றும்  அந்த சம்மேளனத்தினர் சுட்டிக்காட்டினர்.

இரணைமடுக் குளம் கனகாம்பிகையம்மன் பெருங்கோவில் முற்றத்தில் 94 பானைகள் வைத்து பொங்கல் விழா நேற்று (15) நடைபெற்றது. இந்நிகழ்வினை இரணைமடுகுள நீர்த்தேக்கத்தின் கீழுள்ள 22 விவசாயத் திட்டக்குழுக்களும் இணைந்து ஒழுங்குபடுத்தியிருந்தன.

இந்நிகழ்வில் 3000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வின் இறுதியில் விவசாயிகள் சம்மேளத்தின் தலைவர் சி.சிவப்பிரகாசம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் வணபிதா ஹான்ஸ் போவர், கனகாம்பிகைப் பெருங்கோயில் பிரதமகுரு சிதம்பரேஸ்வரகுருக்கள், பெண்கள் அமைப்பின் சார்பாக திருமதி. வி.கிருஸ்ணவேணி, விவசாயி வேந்தன், சம்மேளனச்செயலாளர் சிவமோகன், விவசாயி வேந்தன், ஆகியோர் உரையாற்றினர்.

இதன்போது அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

ஆய்வுகள், கள அனுபவங்கள், கலந்துரையாடல்கள் ஏதுமின்றி இரணைமடு யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகத்திட்டம் வரையப்பட்டள்ளது. அதிகாரிகள் தங்கள் உள்நோக்கங்கள் பலவற்றைக்கொண்டு இத்திட்டத்தை வடிவமைத்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தவர்களாகிய நாங்கள் விவசாயக்குளமாகிய இரணைமடுவைக் காட்டியே இங்கு குடியமர்த்தப்பட்டோம்.

எங்களுடைய வேர் யாழ்ப்பாணம் தான். நாங்கள் கிளிநொச்சியில் விவசாயச் செய்கைக்காக விழுதெறிந்தவர்கள். இப்பொழுது எமது ஜீவனாம்சமாகிய நெற்செய்கை சிறுபோக காலத்தில் முற்றிலும் செயலிழக்கும்  அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் மூடிய அறைக்குள்ளிருந்து திட்டங்களைத் தீட்டுகிறார்கள். பாமர விவசாயிகளாகிய நாங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பகிரங்கமாக விளக்கமளிப்பதற்கு அவர்கள் தயாராகவில்லை.

'2000 கோடி' என்கின்ற நிதியின் அடிப்படையிலேயே இத்திட்டத்தை அவர்கள் பார்க்கிறார்கள். குடிநீரை வழங்கக்கூடாது என்பது எமது கருத்தல்ல. யாழ்ப்பாண மக்கள் எம்முடைய இரத்த உறவுகள். நாங்கள் ஒரு கொடியில் பூத்த மலர்கள் என்பதானாலே எங்களிடையே பேதங்களையோ பிரச்சனைகளையோ சில அதிகாரிகளாலோ சில அரசியல்வாதிகளாலோ ஏற்படுத்தி விடமுடியாது.

உண்மையிலேயே எங்களுடைய கோரிக்கை என்னவென்றால் காலபோகத்தில் 30000 ஏக்கர்களுக்கு மேல் இரணைமடுத் திட்டத்தின் கீழ் நெல் விளைவிக்கப்படுகின்றது. ஆனால் தற்போது சிறுபோகத்தில் சுமார் 8500 வரையான ஏக்கரே செய்கை பண்ணக்கூடியதாக இருக்கிறது.
சில வருடங்களில் மானாவாரிக்கு கூட நீர்ப்பாசனம் செய்யவேண்டிய நிலை இருக்கிறது. அத்துடன், சிறுபோகத்தில் பல தடவைகள் வயல்கள் எரிந்திருக்கின்றன. 

உண்மையில் இரணைமடுக் குளத்தின் மேலதிக நீர் என்பது 36 அடிக் கொள்ளளவுள்ள குளம் நிரம்பி வெளிப்பாய்கின்ற நீர்தான். இருந்தும் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளதால் தற்போது 17 அடி நீர்க் கொள்ளவையினையே  இரணைமடுக்குளம் கொண்டிருக்கின்றது.


1990க்கு பிற்பாடு நீர்வரி இடாப்பு புதிப்பிக்கப்படவில்லை. இரணைமடுக் குளத்திலிருந்து நீர் பாய்ச்ச வேண்டிய பல விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சப்படுவதில்லை. 50 வருடங்களாக அதிகரித்த சனத்தொகைக்கு ஏற்ப சிறுபோகத்தில் விளைநில அதிகரிப்பும் ஏற்படவில்லை.

இவற்றால் தான் விவசாயிகளுடைய பிரச்சனைகளுக்கு தீர்வைக் கண்ட பின் ஏனையவற்றை பரிசீலிக்கலாம் என்கிறோம். இப்பொழுது வீணாகிய நீர் குறித்து அதிகாரிகள் பேசுகிறார்கள். நாங்கள் சொல்கின்றோம் குளத்தையும் புனரமைத்து கால்வாய்களையும் திருத்தி நீர்வழங்கி விட்டுப் பாருங்கள் வீணாகும் நீரின் அளவு எவ்வளவு என்று. எனவே குளத்தை நம்பி வந்த எங்களை, எங்களின் வாழ்க்கையை, அரசியல், நிதிசார் நோக்கங்களுக்காக சிதறடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஆய்வுகளும் அனுபவங்களுமின்றி, திறந்த கலந்துரையாடல்களும் இன்றி மேற்கொள்ளப்படுகின்ற இத்திட்டத்தினால் வறுமையும் வறுமையின் விளைவுகளும் சமூகப்பிளவுகளையும் ஏற்படுத்த முடியுமே அன்றி உண்மையான மனச்சுத்தி நிறைந்த நீர்விநியோகத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .