2025 ஜூன் 26, வியாழக்கிழமை

யாழ். விவசாயிகளின் உருளைக்கிழங்குகளை சதோச நிறுவனம் இன்று முதல் கொள்முதல்

Kogilavani   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். மாவட்ட உருளைக்கிழங்குகள் செய்கையாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை லங்கா சதொச நிறுவனம், கிலோகிராம் ஒன்ற 70 ரூபா விலையில் திங்கட்கிழமை (03) முதல் கொள்வனவு செய்து வருவதாக கமநல திணைக்கள உதவி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் 72 ஹெக்டேயர் நிலப்பரப்பில் உருளைக்கிழங்குகள் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை நிலையினை அடைந்துள்ளது.

யாழில் இவ்வாறு செய்கை பண்ணப்பட்ட உருளைக் கிழங்குகளுக்கு நல்ல சந்தை வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் கடந்த ஜனவரி 18 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட உருளைக்கிழங்கு செய்கையாளர்கள் சங்கம், லங்கா சதொச நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, யாழ். மாவட்ட உருளைக்கிழங்கு செய்கையாளர்களினால் செய்கை பண்ணப்பட்ட உருளைக் கிழங்குகளை 70 ரூபா விலையில் லங்கா சதோச நிறுவனம் கொள்வனவு செய்யும் என்று தீர்மானிக்கப்பட்டதுடன், சதோச நிறுவன அதிகாரிகள் உருளைக்கிழங்குகளின் மாதிரிகைகளை விவசாயிகளிடமிருந்து பெற்றும் சென்றனர்.

தொடர்ந்து, லங்கா சதொச நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் மாதிரிகளைப் பரிசோதித்ததன் பின்னர் உருளைக்கிழங்குகளைக் கொள்வனவு செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டு, இன்று (03) முதல் உருளைக்கிழங்குகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன என பற்றிக் நிறஞ்சன் மேலும் தெரிவித்தார்.

இன்றைய தினம் 10 ஆயிரம் கிலோகிராம் உருளைக்கிழங்குகளை கொள்வனவு செய்யவுள்ளதாகவும், தொடர்ந்து வரும் நாட்களிலும் இந்தக் கொள்வனவு இடம்பெறும் என்றும், அத்துடன் இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் உருளைக்கிழங்குகள் நாடெங்கிலும் உள்ள சதொச நிறுவன விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் கொள்வனவில் ஈடுபடும் சதொச நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .