2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இனப்பரம்பலை மாற்றியமைக்கவே நல்லிணக்கம் பயன்படுத்தப்பட்டது: ரவிகரன்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


2009ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட நல்லிணக்க கால அவகாசம் தமிழர்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கவே பயன்பட்டுள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

அமெரிக்கா அரசியல் அதிகாரி மைக்கேல் யு.ஏர்.விற்கும் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனும் இடையில் சந்திப்பொன்று நேற்று (20) முல்லைத்தீவில் இடம்பெற்றது. இச்சந்திப்பு தொடர்பாக ரவிகரன் கருத்து தெரிவிக்கையில்,

'அமெரிக்கா அரசியல் அதிகாரியிடம் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாகவும் பல்வேறு ஆவண ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளேன்' எனக் கூறினார்.

'அதிகார பலத்தின் உதவியுடன் ஆயுத பலத்துடனும் தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களில் நடைபெறும் நில அபகரிப்புகள் எல்லையற்று தொடர்வது குறித்து தமிழ் மக்கள் எண்ணிலடங்கா முறைப்பாடுகளை எமக்கு தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு தெரிவிக்கும் இந்த புள்ளி விபரங்களை தவிர இன்னும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், தோட்டக் காணிகள்  என்பன இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளது.

மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேசங்களிலும் அபகரிப்புக்கள் இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் 58.96 வீதமாக இருந்த தமிழர்கள் 2012 இன் படி 39.79 வீதமாக குறைந்துள்ளது. அதே நேரம் 4.66 வீதமாக இருந்த சிங்கள மக்கள் 2012 இன் படி 23.15 வீதமாக உயர்ந்துள்ளது.

இந்த வீதத்தில் பெரும்பகுதி எமது பகுதிகளில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலமாக அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. இப்போது இந்த நடவடிக்கைகள் வட பகுதியில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தொடர்கின்றது.

எங்களுடைய மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்களாகவே உங்களை நாம் இன்று  பார்க்கின்றோம். எங்களுடைய மக்களுக்கு விடிவு கிடைக்க உங்களின் முயற்சி இன்று அவசியமாகின்றது' என அமெரிக்கா அரசியல் அதிகாரியிடம் ரவிகரன் கேட்டுக்கொண்டார்.

மேலும், '2012ஃ2013 இல் நீங்கள் இரண்டு தடவைகள் பிரேரணைகளை கொண்டு வந்துள்ளீர்கள். இக்காலத்தினுள் தான் குடியேற்றங்கள் நடைபெறுகின்றது. கால அவகாசம் வழங்கப்பட இந்த நிலைகள் இன்னும் மோசமாகின்றது' எனவும் சுட்டிக்காட்டியுள்ளேன்.

இனியும் கால அவகாசம் வழங்குவது இந்த நிலையை இன்னும் தீவிரமாக்குவதாகவே அமையும். ஆதலால் இம்முறை கொண்டுவரும் தீர்மானத்தையாவது தமிழ் மக்களின் விருப்பத்திற்கேற்ற நிரந்தர தீர்வை நோக்கி நகர்த்தும் வகையில் கொண்டு வரும்படியே உங்களிடம் கோருகின்றோம் என மீண்டும் அமெரிக்கா அரசியல் அதிகாரியிடம் நான் கேட்டுக்கொண்டேன்' என ரவிகரன் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .