2025 ஜூன் 28, சனிக்கிழமை

நீதியான விசாரணை செய்யாவிட்டால் சர்வதேசத்திற்கு சொல்வோம்

Kogilavani   / 2014 மார்ச் 22 , மு.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'ஆசிரியர் நிரூபனின் மரணத்திற்கு நீதியான விசாரணை செய்யாவிட்டால் சர்வதேசத்திற்கு சொல்வோம். வடமாகாணத்தில் ஆசிரியர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் சுதந்திரமாக தங்கள் பணிகளினை முன்னெடுக்க முடியாதுள்ளது' என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (21) தெரிவித்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலில் வாக்களிப்பதற்காக வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது காணாமற் போயிருந்த ஆசிரியர் கார்த்திகேசு நிரூபனின் மரணத்திற்கு நீதியான விசாரணை கோரி கறுப்புப்பட்டி ஆர்ப்பாட்டமொன்று வெள்ளிக்கிழமை (21) மாலை 2 மணியளவில் யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே ஸ்டாலின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

'வடமாகாணத்தில் சாதாரண ஆசிரியர் ஒருவர் காணாமற் போயுள்ளார் என்றால் சுதந்திரமான ஒரு நிலை இங்கு இல்லை. ஒரு ஆசிரியர் காணாமல் போய் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார் என்றால் இந்த தேசம் எப்படியான ஒரு தேசம் என்ற பயம் எமக்கு வருகின்றது.
காணாமற்போய் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட ஆசிரியரின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும். அதேவேளை, ஆசிரியர் சமூகம் சுதந்திரமாக வேலை செய்ய வேண்டும். 

ஆனால், வடமாகாணத்தில் ஆசிரியர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், சுதந்திரமாக வேலை செய்ய முடியாதுள்ளது.
இதற்கு நீதியான விசாரணை வேண்டும். கார்த்திகேசு நிரூபன் மட்டுமன்றி, மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பிலும் விசாரணைகள் செய்யப்பட வேண்டும்.

இவற்றிற்கு உடனடி விசாரணை மேற்கொள்ளாவிட்டால், மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேசம் உட்பட சமூக அமைப்புக்களுக்கு இந்த விடயங்கள் பற்றி சொல்வோம்' என்று அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .