2025 ஜூன் 28, சனிக்கிழமை

பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு

Kogilavani   / 2014 மார்ச் 26 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பிரதேச சபைகளில் இருந்து சுகாதாரத் திணைக்களத்திற்கு மாற்றப்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மீளவும் பிரதேச சபைகளின் கீழ் இணைக்குமாறு கோரி நல்லூர் பிரதேச சபையினால் புதன்கிழமை (26) காலை 10 மணி முதல் 11 மணி வரையான ஒரு மணிநேர பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது. 

இந்த போராட்டம் பற்றி நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.வசந்தகுமார் கருத்துத் தெரிவிக்கையில், 

'நல்லூர் பிரதேச சபையில் இரு பொதுச் சுகாதார பரிசோதர்களுக்கான வெற்றிடங்கள் இருந்தன. இந்நிலையில், 2013 ஆம் ஆண்டு சுற்றறிக்கையின் பிரகாரம் 2 பொது சுகதார பரிசோதர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தெல்லிப்பளை பிரதேசத்தில் பொது சுகாதார பரிசோதகருக்கும், சுகாதார வைத்திய அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினையடுத்து, பிரதேச சபைகளின் கீழ் கடமையாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாற்றுமாறு சுகாதார வைத்தியதிகாரிகளினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பின்னர், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் ஆலோசனைக்கமைய வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் பிரதே சபைகளின் கீழிருந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாற்றப்பட்டனர்.

இருந்தும் பிரதேச சபைகளின் கீழிருந்த பொதுச் சுகாதார பரிசோதகர்களை மீண்டும் பிரதேச சபைகளின் மாற்றும்படி, சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் வெளிக்களப் பணிப்புறக்கணிப்பில் கடந்த 17 ஆம் திகதி முதல் ஈடுபட்டு வருகின்றனர். 

கொல்கலன்கள் (ஆடுகள் மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் இடம்), சந்தைகள், கடைகள் உள்ளிட்டவற்றினை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பார்வையிடாமையினால் அவ்விடங்களில் சுகாதார சீர்கேடுகள் நிலவி வருகின்றன.

ஆகவே, பிரதேச சபைகளின் கீழ் கடமையாற்றிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை மீண்டும் பிரதேச சபைகளின் பணியாற்றுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறு மாற்றப்படாமல் விட்டால் வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள பிரதேச சபைகளின் நடவடிக்கைகளை முடக்கி போராட்டம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக வசந்தகுமார் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நல்லூர், உடுவில் (வலி.தெற்கு), தெல்லிப்பளை (வலி.வடக்கு), சங்கானை (வலி.மேற்கு) ஆகிய பிரதேச சபைகளின் கீழ் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடமையாற்றி வந்திருந்தனர்.

இருந்தும் அவர்கள் தங்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தங்களால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் இதனால் குறித்த 4 பிரதேச சபைகளின் கீழுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாற்றும்படி சுகாதார வைத்தியதிகாரிகள் போராட்டம் முன்னெடுத்தனர்.

பின்னர், வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் ஆகியோர் இணைந்து உடுவில் தவிர்ந்த ஏனைய பிரதேச சபைகளின் கீழிருக்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் இடமாற்றம் செய்தார்கள்.

உடுவில் பிரதேச சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு 'காடர்' (பணியாற்றுவதற்கான அனுமதி) இருந்தமையினால் அவர் தனது ஓய்வுகாலம் வரையிலும் பணியாற்றலாம் எனவும்  ஓய்வு பெற்ற பின்னர் புதிய பொதுச்சுகாதார பரிசோதகர் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றுவார்கள் என வடமாகாண ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இருந்தும், பிரதேச சபைகளின் கீழ் பணியாற்றிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை மீண்டும் பிரதேச சபைகளின் கீழ் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனக்கோரி, சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 70 இற்கும் மேற்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வெளிக்களப் பணிப்புறக்கணிப்பில் கடந்த 17 ஆம் திகதி முதல் ஈடுபட்டு வருகின்றனர்' என அவர் மேலும் தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .