2025 ஜூன் 28, சனிக்கிழமை

சிறிய, நடுத்தர கைத்தொழிற்துறை மேம்பாட்டின் மூலமே பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்: டக்ளஸ்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறைகளின் ஊடாக துறைசார்ந்தோரது பொருளாதாரத்தையும்,  வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதே வாழ்வின் எழுச்சி திட்டத்தின் பிரதான நோக்கமாகுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை  (02) இடம்பெற்ற வாழ்வின் எழுச்சி தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயிற்சிகளை நிறைவு செய்த பயனாளிகளுக்கு தொழிற்துறைசார்ந்த உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

'சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறைகளை மேம்படுத்துவதன் ஊடாகவே சமூக பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். அதனைக் கருத்தில் கொண்டு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான பனை அபிவிருத்தி சபை, கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் தேசிய வடிவமைப்பு சபை ஆகிய நிறுவனங்களின் ஊடாக பல்வேறு விதமான கைத்தொழிற்துறைகள் விருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், வட மாகாணத்தில் கிடைக்கப் பெறக்கூடியதான பனைசார்ந்த தொழிற்துறையை மேம்படுத்தும் வகையில் பனை அபிவிருத்தி சபையின் வழிகாட்டல்களின் கீழ் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, விசேடமானதும் நவீனத்துவமானதுமான பயிற்சி நெறிகள் தொழிற்துறை சார்ந்தோருக்கு வழங்கப்பட்டு அவற்றின் மூலம் தொழிற்துறைசார்ந்த பயிற்சி நெறிகள் எதிர்காலத்தில் தேசிய வடிவமைப்பு சபையினூடாகவும் நெறிப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இந்நிலையில், கிடைக்கப் பெறுகின்ற தொழிற்துறை உபகரணங்களை உரிய முறையில் பயன்படுத்தி அதனூடாக உரிய பயன்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும், அவ்வாறு செயற்படுத்தப்படும் பட்சத்திலேயே சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறைகள் முன்னேற்றம் காணும் அதேவேளை, அதனூடாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியுமென்பதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஊடாக கைத்தொழிற்துறைகளை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென்றும் கூறினார்.
 
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பனை அபிவிருத்திச் சபையில் பனைசார்ந்த பயிற்சிகளை நிறைவு செய்த 60 பயனாளிகளுக்கு தலா 10,000 ரூபா பெறுமதியான தொழிற்துறை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
 
இந்நிகழ்வில், வாழ்வின் எழுச்சித் திட்டப் பணிப்பாளர் கமகே, பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம், பனை அபிவிருத்தி சபையின் விரிவாக்கல் முகாமையாளர் எஸ்.கோபாலகிருஸ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .