2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இராணுவக் கெடுபிடிகளை உடனடியாக நிறுத்து

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் ஆண்கள் விடுதியினுள் இராணுவப் புலனாய்வாளர்கள் வியாழக்கிழமை (24) அத்துமீறி உள்நுழைந்து சோதனை மேற்கொண்டு மாணவர்களை அச்சுறுத்தியமை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றினை வெள்ளிக்கிழமை (25) வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 
' வியாழக்கிழமை (24) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதி முழுவதிலும் இராணுவப் புலனாய்வாளர்கள் அத்துமீறி உள்நுழைந்து சல்லடைபோட்டுத் தேடுதல் நடத்தியுள்ளதுடன் மாணவர்களையும் அச்சுறுத்திச் சென்றுள்ளனர். இதனால் மாணவர் விடுதி மற்றும் பல்கலைக்கழக சூழலில்; பெரும் பதற்றம் நிலவுகின்றது.
 
இது தொடர்பாக நிர்வாகத்தினருக்கு அறிவித்தும் அவர்கள் பேசாமடந்தைகளாக இருப்பது  மாணவர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது தடவையாகவும் துணைவேந்தராக வசந்தி அரசரட்ணம்  பதவியேற்று சில மணிநேரங்களிலேயே இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளதென்றால், எதிர்வரும் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு எவ்வாறு இருக்கும்? என்பது மாணவர்கள் மத்தியில் தற்போதைய கேள்வியாகவுள்ளது. 
 
மாணவர் விடுதிகளினுள் பதிவு செய்யப்பட்ட மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்கள் எவருமே அனுமதிக்கப்படுவதில்லை.
 
இது விடுதியைச் சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்புக் கருதியே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என பல்கலைக்கழகத்தால் கூறப்பட்டிருந்த போதிலும், இராணுவப் புலனாய்வாளர்களின்  இந்த அத்துமீறிய செயல் எதற்காக?
 
அனைத்து வகைகளிலும் எமது கருத்துரிமைகளைப் பயங்கரவாதம் என்ற பொருளைக் காரணம் காட்டி அடக்கிவரும் பாதுகாப்புத் தரப்பு, காரணமே இல்லாமல் இவ்வாறு அத்துமீறி உள்நுழைந்து தேடுதல் நடத்துகின்றமையானது, மாணவர்கள் மத்தியில் கடும் அச்சவுணர்வினை ஏற்படுத்தியுள்ளது.
 
யுத்தம் முடிவடைந்து பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கியெறிந்துவிட்டோம் எனப் பகிரங்கமாக முரசறைந்த இலங்கை அரசாங்கம் இன்று வரை தான் கூறும் அத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களை சிறியளவேனும் எதிர்கொண்டதில்லை.
 
இந்நிலையில் இல்லாதவொன்றை இருப்பதாகத் தானே உருவாக்கிக்கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தையும் தொடர்ந்து அச்சுறுத்தும் நடவடிக்கைகள் எதற்காக?
 
அரசாங்கமே! நாங்கள் மாணவர்களே தவிர நீங்கள் தேடுகின்ற அந்த அருவங்களில்லை. இதுவரை நாம் பட்ட துன்பங்களெல்லாம் போதும். கல்வி ஒன்றே எமக்குரிய வாழ்வுரிமைப் பொருளாகக் கருதி ஜனநாயகத்தை நேசிக்கும் எம்மீது அந்தத்துளிகளைத் தெளிக்காதீர்.
 
நாம் கேட்பதெல்லாம் மாணவர்களுக்குரிய நியாயமான உரிமைகளே. நாம் எப்போதும் ஜனநாயகத்தை நேசிப்பவர்கள். ஆகவே எமது கல்விச் செயற்பாடுகளிற்கு இடையூறுகளை ஏற்படுத்தவல்ல இத்தகைய விஷமத்தனமான செயற்பாடுகளை எம்மீது பிரயோகிப்பதை உடன் நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

இந்நிலை தொடருமாயின் அனைத்துப் பீடங்களையும் ஒன்றிணைத்து காலவரையறையற்ற போராட்டத்தில் குதிப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதைக் கவனத்தில் எடுத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .