2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

'எம்மக்கள் அரசியல்வாதிகள், அதிகாரிகளோடு போராட வேண்டியுள்ளது'

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

முள்ளிவாய்க்காலோடு போர் முடக்கப்பட்டாலும், எம்மக்கள் தினம் தினம் தம் வாழ்வியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு  அரசியல்வாதிகளோடும் அதிகாரிகளோடும் போராட வேண்டியுள்ளதாக முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த் தெரிவித்தார்.

அவரால் புதன்கிழமை (30) வெளியிடப்பட்டுள்ள தொழிலாளர் தின அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'
பாடுபடுபவர்க்கே இந்தப் பாரிடம் சொந்தமையா|| என்ற தமிழ்க் கவிஞனின் கூற்றை நினைவில் நிறுத்தி பாடுபடும் தொழிளாளர்களுக்காக இந்தத் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. 

எம்நாட்டில் முதலாளி வர்க்கத்திற்கென மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்துபோன தொழிலாளி வர்க்கத்தினர் இன்னமும் ஓலைக் குடிசையிலும் ஓட்டைப் பாயிலும் தம் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலோடு போர் முடக்கப்பட்டாலும், எம்மக்கள் தினம் தினம் தம் வாழ்வியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள அரசியல்வாதிகளோடும் அதிகாரிகளோடும் போராட வேண்டியுள்ளது.

முதலாளி வர்க்கம் முதலாளி வர்க்கமாக்கப்பட்டுக் கொண்டிருக்க, அவர்களை உருவாக்கிய தொழிலாளிகள் இன்னமும் இன்னொருவர் நிலத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். அகதி முகாம்களிலும் அந்நிய தேசத்திலும் எம்மக்கள் தொழிலாளிகளாக துன்புற்றுக் கொண்டிருக்கிறார்கள். போரின் கொடிய பார்வையால் பள்ளி செல்லவேண்டிய பிஞ்சு மகன் தொழிலாளி ஆக்கப்பட்டு தன் தாய்க்காக, சகோதரிக்காக, காலில்லாத தன் தந்தைக்காக உழைக்கும் நிலை உருவாகியுள்ளது. சிறுவர் தொழிலாளிகளை தடுக்க அண்மையில் சட்டங்கள் முன்வந்து நிற்கின்றன.

அவர்களை நல்வழிப்படுத்த முன்வந்தவர் யார்? என்ற கேள்வியையும் இன்றைய நாளில் கேட்கவேண்டிய கட்டாயம் உள்ளது. தொழிலாளர்களை பேணிப் பாதுகாக்க தொழிலாளர் சட்டங்களை  அவர்களுக்கு தெரியப்படுத்த, அவர்களை அவர்களுக்கு உணர்த்தி அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க போதிய தொழிற்ச்சங்கங்கள் இல்லை.

இதனால், தொழிலாளர் பிரச்சினைகள் பேசப்படுவதும் குறைவடைந்து விட்டது. அல்லது அவர் தம் தேவைகளை வீதியில் இறங்கி போராடிப் பெறவேண்டிய, அறிவிக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது. எட்டு மணிநேர வேலை என்ற நிலைமாறி சம்பள உயர்வோ மேலதிக நேரக் கொடுப்பனவுகளோ இன்றி அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இந்த முதலாளி வர்க்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
கடினமான வீதி வேலைகளை பெண்கள் செய்யும் நிலை உருவாகியுள்ளது. உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ வேலை செய்யும் எம் தொழிலாளர்களை பாதுகாக்க எவ்வித பிரயோசனம் இல்லாத சட்டங்களே எம்மிடம் உள்ளன. இப்படியொரு அசாதாரண சூழ்நிலையில் தான் நாம் தொழிலாளர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். எல்லோரும் முதலாளிகளாக இருக்க ஆசைப்பட்டமையினால் தொழிலாளிகள் கசக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எம்நாட்டில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களிற்கும் வெளிநாட்டில் பணிபுரியும் எம் பெண் தொழிலாளர்களிற்கோ போதுமான பாதுகாப்பு இல்லை.

உரிமைப் போராட்டதிலும் மண் மீட்புப் போராட்டத்திலும் ஈடுபட்ட எம் இளைஞர், யுவதிகள் சிறை மீட்கப்பட்டு அவர்கள் தம் உறவுகளுடன் சமுதாய அந்தஸ்தை பெற்று அவர்களின் தகுதி அடிப்படையில் வேலைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு உரிய வாழ்வியலை இந்த அரசியல் எப்போது பெற்றுக்கொடுக்கிறதோ, எப்போது அந்த இளைஞர், யுவதிகளெல்லாம் வேலை வாய்ப்புக்களை பெற்று தாம் தம் குடும்பம் சகிதம் நானும் இந்த மண்ணின் மைந்தன் என்ற உணர்வோடு வாழ்கின்றானோ அன்று தான் உண்மையான தொழிலாளர் தினமாக நாம் கருதுகின்றோம்.

கலப்படம் இல்லாத கல்வி, சுயநலமற்ற சமூகப்பார்வை, சிபாரிசுகள் அற்ற வேலைவாய்ப்புக்கள் என எமது சமூகத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறதோ ஒவ்வொரு தொழிலாளியும் மூன்று நேரமும் நன்றாக உண்டு எந்த சலனங்களும் இன்றி நிம்மதியான உறக்கமும் உற்சாகமான விழிப்பும் என என்றைக்கு வாழ்கின்றானோ அன்று தான், உண்மையான உணர்வுபூர்வமான தொழிளாளர் தினம் என நாம் கருதுகின்றோம்.

மற்றவர்களைக் குறைசொல்லியே காலம் கழிக்காமல் நடைமுறைக்குச் சாத்தியமற்றவற்றை மேடைகளில் முழங்கி, உணர்வுகளில் உள்ளூர உணர்த்தி வீதிகளில் தமிழர்களை நாதிகளாக்கும் நிலையை அரசியல்வாதிகள் கைவிட்டு ஏதாவது செய்ய முன்வர வேண்டும். அல்லது முயற்சிக்க வேண்டும்'  என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X