2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

உறுதிமொழியை அடுத்து ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்

Suganthini Ratnam   / 2014 மே 05 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


அதிகஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றிவரும்  ஆசிரியர்கள் தங்களுக்கான இடமாற்றத்தை வழங்குமாறு கோரி வடமாகாண கல்வி அமைச்சின் முன்பாக திங்கட்கிழமை (05) காலை முன்னெடுத்த போராட்டம், வடமாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளர் எஸ்.சத்தியசீலனின்  உறுதிமொழியை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, துணுக்காய், மடு மற்றும் தீவகம் கல்வி வலயங்களைச் சேர்ந்த  77 ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலும், மேற்படி ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் எஸ்.சத்தியசீலனுடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ். மாவட்டத் தலைவர் தேவராசா செந்தூரன் மற்றும்  செயலாளர் செல்லையா சிவன்சுதன்  கலந்துரையாடினர்.

இதன்போது, 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம்  சேவைக்காலம் முடிந்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் என்பதுடன், இந்த இடமாற்றத்தை  உறுதிப்படுத்திய கடிதங்களை எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைப்பதாக எஸ்.சத்தியசீலன் உறுதியளித்தார்.

இதனை அடுத்து, மேற்படி ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில்,

'தங்களுக்கான   இடமாற்றம் வழங்கப்படாவிட்டால், மீண்டும் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்படும்.

2005ஆம் ஆண்டிலிருந்து கஷ்டப்; பிரதேசங்களில் நாங்கள் கடமையாற்றி வருகின்றோம். இந்த நிலையில், எங்களின் 05 வருட சேவைக்காலம் நிறைவடைந்துள்ளது. ஆனால், எங்களின் ஆரம்ப சேவைக் காலத்தின் கணக்கீட்டை குறைத்து  கணக்கிட்டதால், எங்களது இடமாற்றங்கள் தள்ளிப்போயிருந்தன.

மேலும்,  எங்களுடன் கடமையில் ஈடுபட்ட ஏனைய ஆசிரியர்கள்  05 வருடகால  சேவையை  நிறைவுசெய்து வேறு வலயங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். ஆனால், எங்களின் இடமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எங்களின்  இடமாற்றத்தை  விரைவாக வழங்குமாறு கோரியே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்' என்றனர்.

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சந்தித்து  அவர்களின் பிரச்சினைகளை  கேட்டறிந்துகொண்டார்.

தன்னால் குரல் கொடுக்க முடிந்தளவிற்கு குரல் கொடுத்து ஆசிரியர்களின் இடமாற்றத்திற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் சிவஞானம் சிறிதரன் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X