2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மிருகபலியை நிறுத்தாவிடில் வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 08 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் சனிக்கிழமை (14) இடம்பெறவுள்ள மிருகபலியை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து மிருகபலியை நடத்த முற்படுமாயின் ஜீவகாருண்ய அடிப்படையில் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று சிவன் மானிட மேம்பாட்டு நிறுவனம் சனிக்கிழமை (07) தெரிவித்தது.

இது தொடர்பாக சிவன் மானிட மேம்பாட்டு நிறுவனத் தலைவர் சிவத்திரு இ.கலியுகவரதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'கவுணாவத்தை ஆலயத்தை முன்மாதிரியாகக் கொண்டே குடாநாட்டிலுள்ள ஏனைய சில ஆலயங்களிலும் மிருகபலி இடம்பெறுவதாகவும் இந்த ஆலயத்தில்; மிருபலியை நிறுத்துவதன் மூலம் ஏனைய ஆலயங்களுக்கும் முன்மாதிரியாக நடந்துகொள்ளவும்.

சமயங்கள் அனைத்தும் அன்பையே போதிக்கின்றன. அதேபோன்று சைவ சமயமும் அன்பையே போதிக்கின்றது. இறை சந்நிதானத்தில் அனைத்து உயிர்களும் சமமானவை என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இறைவன் அனைத்து உயிர்களையும் தனது வாகனமாக்கியிருக்கின்றார்.

இதனை வெளிப்படுத்தவதற்காகவே ஆலயங்களில் நடைபெறுகின்ற திருவிழாக்களில் சுவாமியை காவுவதற்கு ஒவ்வொரு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு அன்பு நெறியாக அமைந்த சைவ சமயத்திலுள்ள நாங்கள் ஆடுகளையும் சேவல்களையும் ஆலயத்திற்கு கொண்டு சென்று மிருகபலி செய்வதானது மனிதாபிமானமற்ற செயலாகும். மிருகங்களுக்கு குறி சுடுதலையே பாவமாகக் கருதுகின்ற தற்போதைய காலத்தில் அதுவும் மக்கள் வழிபாடு செய்கின்ற ஆலயத்தில் மிருகங்களைப் பலியிடுவதானது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆலயங்களில் மிருகபலி இடம்பெறும்போது அதனைப் பார்த்துக்கொண்டிருக்கின்ற சிறுவர்கள் எதிர்காலத்தில் வன்முறைமிக்கவர்களாக மாறுகின்றனர். பெண்களும் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

குடாநாட்டிலுள்ள கவுணாவத்தை மற்றும் பிரான்பற்று ஆகிய இடங்களிலுள்ள ஆலயங்களை முன்மாதிரியாகக் கொண்டு ஏனைய சில பிரதேச ஆலயங்களிலும் வருடாந்தம் நூற்றுக்கணக்கான ஆடுகளும் கோழிகளும் இறை சக்திக்கு முன்னால் பலியிடப்படுகின்றன. ஆலய நிர்வாகங்கள் தங்கள் வியாபார நோக்கத்திற்காகவே இதனை காலம் காலமாக மேற்கொண்டு வருகின்றன. இதை நிறுத்துமாறு பல தடவைகள் பல இந்து அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றபோதிலும், குறித்த ஆலய நிர்வாகங்கள் அதற்குச் செவிசாய்க்கவில்லை. 

இம்முறையும் கவுணாவத்தை ஆலயத்தில் வேள்வி என்ற பெயரில் மிருகபலி நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக நாம் அறிகின்றோம். எனவே குறித்த ஆலயம் அதனை நிறுத்தி யாழ்.குடாநாட்டிலுள்ள ஏனைய ஆலயங்களுக்கு முன்மாதிரியாக நடந்துகொள்ளுமாறு நாம் விநயமாக கேட்டுக்கொள்கின்றோம்.

அவ்வாறு நிறுத்தாத பட்சத்தில் ஜீவகாருண்ய அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, அதனை தடுத்து நிறுத்த நாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்பதை தெரியப்படுத்துகின்றோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X