2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சுயலாப அரசியலுக்காக எதையும் கதைக்கலாம் என்று த.தே.கூ. எண்ணுகிறது

Kogilavani   / 2014 ஜூன் 10 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


எமது மக்களின் நலன்கருதிய வாழ்வாதார உதவிகளுக்கு எவரேனும் இடையூறுகளை விளைவித்தாலோ அன்றி அதற்கு ஏதேனும் தடைகள் இருந்தாலோ அவற்றைத் தகர்த்தெறிந்து விட்டு எமது மக்களின் நியாயமான அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதே தனது நோக்கமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (10) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திக்கம் வடிசாலையை சர்வதேச தரமிக்க உற்பத்திச்சாலையாக மாற்றி அதன் வருவாயை அதிகரித்து அதன் மூலம் அதுசார்ந்த சமூகத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கத்துடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சில விசமிகள் பொய்யான புரளிகளை  கிளப்பி வருவதாகத் தெரிவித்த அமைச்சர்;, இத்துறைசார்ந்த சமூகத்தின் அதீத அக்கறை காரணமாக இத்துறையை வளர்த்தெடுக்க முழு முயற்சிகளையும் தான் மேற்கொண்டு வருவதையும் உணர்த்தினார்.

தனது அமைச்சின் கீழுள்ள பனை அபிவிருத்திச் சபைக்குரிய திக்கம் வடிசாலையின் உற்பத்திகள் ஏனைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்திகளுடன் போட்டியிட இயலாத தரத்திலேயே உற்பத்தி செய்யப்படுவதனால் அவற்றின் சந்தைவாய்ப்பு குறுகியதாக உள்ளதுடன் விலையும் மிகவும் குறைவாக உள்ளது எனவே, இவ்வுற்பத்தியின் தரத்தை சர்வதேச தரத்திற்கு அமைவாக உயர்த்தும் நோக்கிலேயே வடிசாலை நவீனமயப்படுத்தப்படுகிறது என்றார்.

அதுவரையில் இங்கு பணியாற்றி வந்துள்ள அனைத்து பணியாளர்களுக்குமான ஊதியம் தனது கட்சி நிதியிலிருந்தே வழங்கப்படுகிறது என்று கூறினார்.

திக்கம் வடிசாலை பற்றி இன்று தங்களது சுய விளம்பரங்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்போர் இச் செலவீனங்களை ஏற்கத் தயாராக இல்லை.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த செலவீனங்களை ஏற்கத் தயாரா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் நேரிலேயே கேட்டபோது அவர்கள் மௌனம் சாதித்து விட்டார்கள்.

இப்படியானவர்கள்தான் தங்களது சுய விளம்பரங்களுக்காக பொய்யானதும் தவறானதுமான கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

தங்களது சுயலாப அரசியல் காரணங்களுக்காக எதையும் கதைக்கலாம் என இவர்கள் எண்ணுகின்றனர்.

தென்பகுதியில் இருந்து போத்தல்கள் இப்பகுதிக்குக் கொண்டுவரப்படுவதாக நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தவறான விடயமொன்றைக் கூறியிருக்கிறார்.

இத்துறைசார்ந்த எமது மக்களின் நலன்கருதி தென்பகுதியிலிருந்து இப்பகுதிக்கு போத்தல்கள் கொண்டு வரப்படுவது இப்போத்தல்ல, மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே நிறுத்தப்பட்டுள்ளது என்பதை இவர் அறியாதிருப்பது துரதிஷ்டமாகும் என  அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X