2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஒருவர் வெட்டிக்கொலை; சகோதரருக்கு பிணை

Menaka Mookandi   / 2014 ஜூலை 10 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்., கோண்டாவில் பகுதியில் ஜுன் மாதம் 16ஆம் திகதி வீடு புகுந்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட கொலை செய்யப்பட்டவரின் இரண்டு சகோதரர்களில் ஒருவரான ரவீந்திரன் சாரங்கனினை தலா 1 இலட்சம் ரூபா பெறுமதியான 3 ஆட்பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் வியாழக்கிழமை (10) அனுமதியளித்தார்.

அத்துடன், மற்றய சகோதரரான ரவீந்திரன் செந்தூரனை எதிர்வரும் 24ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

இது பற்றித் தெரியவருவதாவது,

கடந்த ஜுன் மாதம் 16ஆம் திகதி, கோண்டாவிலைச் சேர்ந்த ரவீந்திரன் சுகிர்தன் (வயது 19) என்பவர் பலியாகியிருந்ததுடன், அவரது சகோதரர்களான ரவீந்திரன் லக்~ணா (வயது 26), ரவீந்திரன் செந்தூரன் (வயது 23) ஆகிய இருவரும் படுகாயமடைந்திருந்தனர்.

பலியாகிய சுகிர்தன் வீட்டிற்கு முன்னால் நின்றிருந்த வேளையில் அவ்வீதியின் வழியாகச் மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் சுகிர்தனினை காலால் உதைந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனை அவதானித்த சுகிர்தனின் உறவினர்கள், மோட்டார் சைக்கிள்காரர்களைத் துரத்திச் சென்று அவர்களில் இருவரைப் பிடித்து நையப்புடைத்தனர். இதில் உரும்பிராயினைச் சேர்ந்த டி.றொபின்ராஜ் (வயது 20), எம்.நிராஜன் (வயது 23) ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, படுகாயமடைந்த இருவரின் உரும்பிராய் நண்பர்கள், 7 மோட்டார் சைக்கிள்களில் அன்று இரவு சுகிர்தனின் வீட்டிற்கு சென்று வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் சுகிர்தன் பலியாகியதுடன், சகோதரர்கள் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வந்ததில், றொபின்ராஜ், நிராஜன் ஆகியோரினை அடித்துப் படுகாயமடையச் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கொலை செய்யப்பட்ட சுகிர்தனின் சகோதரர்களான செந்தூரன், சாரங்கன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, யாழ்.நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் மேற்படி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களில் ஒருவரான உரும்பிராய் சிவகுல வீதியினைச் சேர்ந்த யோகராசா ஜெனார்த் (வயது 24) என்பவர் ஜுன் 23ஆம் திகதி மதியம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து, யாழ்., நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர் தொடர்பான வழக்கு நாளை வெள்ளிக்கிழமை (11) நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X