2025 ஜூலை 12, சனிக்கிழமை

யாழ். பல்கலையின் கலைப்பீட மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட சிறப்பு பட்டங்கள் பெறுவதற்கான பாடத் தெரிவில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்றில் செவ்வாய்க்கிழமை (16) ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் தொடர்பில் கலைப்பீட மாணவர்கள் ஒன்றியம் கூறியதாவது,

கலைப்பீடத்தில் முதலாம் ஆண்டு பரீட்சையில் சித்தியடைபவர்கள் 3.0 ஜி.பி.ஏ அடைவு மட்டத்தை பெற்றால் இரண்டாம் வருடத்தில் இருந்து சிறப்பு கலை பட்டம் (4 வருடங்கள்) பெறுவதற்கு விரும்பிய பாட தெரிவுகளை மேற்கொள்ள முடியும். 3.0 ஜி.பி.ஏ பெறாதவர்கள் பொது கலைமாணி பட்டத்துடன் (3 வருடங்கள்) வெளியேற வேண்டும்.

இந்நிலையில், தற்போது இரண்டாம் வருட மாணவர்களில் 644 மாணவர்கள் இருக்கின்றனர். வழமையாக கலைப்பீடத்திற்கு 400 தொடக்கம் 450 வரையிலான மாணவர்களே உள்வாங்கப்படுவார்கள்.

இந்நிலையில், தற்போது சிறப்பு கலைப்பட்டத்திற்கு மாணவர்களை உள்வாங்கும் போது 3.0 என்ற ஜி.பி.ஏ விட கூடுதலான ஜி.பி.ஏ.யின் பெறுமானத்தை அதிகரித்து, ஒவ்வொரு பாடத்திலும் வழமையான எண்ணிக்கையான 40 என்ற மாணவர்கள் தொகையே உள்வாங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புவியியல், அரசியல் விஞ்ஞானம், பொருளியல் ஆகிய பாடங்களில் இந்த நடைமுறையை கலைப்பீடம் பின்பற்றியுள்ளது.

அதிகளவான மாணவர்கள் முதலாம் வருடத்தில் கற்றவர்கள் என்பதனை கருத்திற்கொள்ளாமல் நிர்வாகம் வழமையான மாணவர் எண்ணிக்கையில் பாடங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதனால், ஜி.பி.ஏ 3.0 க்கு மேல் பெற்ற பல மாணவர்கள் சிறப்பு கலை பட்டத்திற்கான பாடங்களை தெரிவு செய்து படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஏற்ப சிறப்பு பாட தெரிவிலும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக ஒன்றியம் கூறியது.

அத்துடன், தற்காலிக விரிவுரையாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாமல் இருப்பதால், விரிவுரைகளும் இடம்பெறுவது குறைவு எனவும் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

இத்தகைய பிரச்சினைகளுக்கு நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரியோ இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், சரியான தீர்வு கிடைக்கப்பெறாவிட்டால் தொடர்ந்து வரும் காலங்களில் வகுப்பு பகிஷ்கரிப்பிலும் ஈடுபடவுள்ளதாக ஒன்றியம் மேலும் தெரிவித்தது.

இது தொடர்பில் கலைப்பீட நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு கேட்டபொழுது, இது தொடர்பில் மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .