யாழ். அரியாலை பூம்புகார் பகுதியில் சிறுமியின் குடும்பத்தாரை கொலை செய்வோம் என அச்சுறுத்தி 17 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய 28 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, செவ்வாய்க்கிழமை(28) உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
அரியாலை முள்ளி வீதியை சேர்ந்த மேற்படி 17 வயது சிறுமி தனது சகோதரியின் வீட்டிற்கு கடந்த தீபாவளி தினத்தன்று மாலை சென்றுள்ளார்.
இதன்போது, அங்கு வந்த 28 வயதுடைய அதேயிடத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணமான நபர், சிறுமியின் சகோதரியை அடித்ததுடன், சிறுமியை அடித்து இழுத்து சென்று பூம்புகார் பகுதியிலுள்ள பற்றைக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
தொடர்ந்து, இது தொடர்பில் வெளியில் தெரிவித்தால் குடும்பத்தார் அனைவரையும் கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். மேலும் சிறுமியை கடத்தி சென்று தனது தாய் வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் தாயார் 23ஆம் திகதி தனது மகளை காணவில்லையென யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
தாயாரின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சிறுமியை மறைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து சிறுமியை மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து, சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் சந்தேகநபரை, திங்கட்கிழமை(27) மாலை பூம்புகார் பகுதியில் வைத்து யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளையிலேயே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.