2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கஞ்சா கடத்தல் சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணை

George   / 2014 நவம்பர் 17 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். இளவாலை பகுதியில் 81 கிலோகிராம் கேரளா கஞ்சா பொதிகளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவாவின் அனுமதி பெற்று, பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்து வருவதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுள டி சில்வா, திங்கட்கிழமை (17) தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து மாதகல் துறைமுகம் ஊடாக கஞ்சாவை கடத்தி அதனை கொழும்பிற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் கும்பல் ஒன்று ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வழிகாட்டலில், இளவாலை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் ரி.கே.எஸ்.ஏ.றோகண தலைமையில் பொலிஸ் அணியொன்று நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்நிலையில், கார் ஒன்றில் கஞ்சா பொதிகளை கடத்தி சென்ற யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த 19, 35 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் கடந்த சனிக்கிழமை (15) இரவு கைது செய்யப்பட்டனர்.

காரிலிருந்து 1 கோடி 2 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.

சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, இந்தியாவிலிருந்து கஞ்சா படகு மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், கார் ஒன்றை நாளொன்றுக்கு 3500 ரூபாய் என்ற அடிப்படையில் வாடகைக்கு அமர்த்தி, அதில் கஞ்சா பொதிகளை கொழும்புக்கு கடத்தி சென்றதாகவும் கூறினார்கள்.

இதனையடுத்து, சந்தேகநபர்களை தொடர்ந்து 72 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி மல்லாகம் நீதிமன்றத்தில் பெறப்பட்டு, சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .