2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விவசாய அமைச்சர் மரம் நாட்டினார்

Gavitha   / 2014 நவம்பர் 26 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் புதன்கிழமை (26) மரம் நடுகை நிகழ்வொன்றை நடத்தினார்.

வடமாகாண மரநடுகை மாதத்தை கொண்டாடும் முகமாக இந்த மரநடுகையை முன்னெடுத்ததாக விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
வடமாகாணத்திலுள்ள பாடசாலைகள், பொது இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில், மரம் நடுகை நடவடிக்கைகளை வடமாகாண விவசாய அமைச்சு இந்த கார்த்திகை மாதத்தில் மேற்கொண்டு வருகின்றது.
 
இது தொடர்பில் விவசாய அமைச்சர் கருத்துக்கூறுகையில்,
மழையின் வருகைக்கு மரங்கள் அவசியம். இன்று உலகளாவிய ரீதியில் பூமியின் வெப்பநிலையை அதிகரிக்க செய்து காலநிலையில் பாதகமான மாற்றங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ள, வளியில் அதிகரித்து செல்லும் கரியமில வாயுவை உறிஞ்சுவதற்கும் மரங்கள் அவசியம்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக எமது இயற்கைக்காடுகள் பல்வேறு காரணங்களால் மிக பெருமளவுக்கு அழிக்கப்பட்டுவிட்டன.

இலங்கைத் தீவில் பிரித்தானியர்கள் காலடி பதித்தபோது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ 80 விழுக்காடு அளவில் செழித்திருந்த இயற்கைக்காடுகள் இன்று 23.87 விழுக்காடுகள் என்ற அளவுக்கு சுருங்கிவிட்டிருக்கிறது.

போராட்ட காலத்தில் பாதுகாக்கப்பட்ட வடக்கின் காடுகள் கூட இன்று தோல் இருக்க சுளை பிடுங்கும் கதையாக படைப்பலம் மிக்க அதிகாரவர்க்கத்தால் கபளீகரம் செய்யப்படுகிறது.
இலங்கையின் வரண்ட வலயமான வடக்கில் காடழிப்பின் காரணமாகவே வெம்மையின் கொடுமையை தற்போது நாம் கூடுதலாக அனுபவிக்க வேண்டியுள்ளது.
இதனால், இயற்கைச் சூழலின் சமநிலையை பேணுவதற்கும் இதனூடாக வடக்கில் எமது எதிர்கால சந்ததிகளின் இருப்பை உத்தரவாதப்படுத்துவதற்கும் மரநடுகையை ஒரு பேரியக்கமாகவே மேற்கொள்ளவேண்டிய கட்டாய நிலைக்கு நாம் இன்று தள்ளப்பட்டுள்ளோம்.
வடக்கில் மரநடுகையை பெருமளவில் முன்னெடுப்பதற்கு தன்பெயரிலேயே 'கார்' என்று மழையின் பெயரைக்கொண்ட கார்த்திகை மாதமே மிகப்பொருத்தமான மாதமாகும். இம்மாதப்பகுதியிலேயே வடக்கில் மழைவீழ்ச்சி அதிகமாக காணப்படுகிறது.

மேலும், தமிழர்கள் தம் வீடுகள் தோறும் விளக்கேற்றி வழிபடும் திருநாளையும் இம்மாதம் தன்னகத்தே கொண்டுள்ளதால், தமிழர்களின் புனிதமான மாதமாகவும் கார்த்திகை கருதப்படுகிறது.

இதன் பின்னணியிலும் மரவழிபாட்டை தமது தொல்வழிபாட்டு முறையாகக்கொண்ட தமிழ்மக்களுக்கு மரநடுகையை மேற்கொள்ள மிகப்பொருத்தமான மாதமாக கார்த்திகை மாதமே உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .