2025 ஜூன் 30, திங்கட்கிழமை

யாழ். நகரில் குழப்பம் விளைவித்த 34 பேருக்கு பிணை

George   / 2015 ஜூன் 08 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் நகரபகுதியில் கடந்த மே மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற குழப்பச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 34 பேருக்கு, 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான தலா 2 ஆட்பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், திங்கட்கிழமை (08) அனுமதியளித்தார்.

யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காண்காணிப்பகத்தை தாக்கியமை, வீதிகளில் டயர் எரித்தமை மற்றும் வீதிச் சமிக்ஞை விளக்கை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

4 பிரிவுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட இவர்களில் இறுதிப்பிரிவான 40 பேரில் 5 மாணவர்கள் உட்பட அறுவர் கடந்த 4ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், மிகுதி 34 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் 34 பேரின் வழக்கு, இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பொதுச் சொத்து குற்றங்கள் (நீதிமன்ற தாக்குதலுடன் தொடர்புபடாதவர்கள்) தொடர்பான கட்டளைச் சட்டத்தில் இவர்களுக்கான வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் இவர்களுக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இவர்களை பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

இவர்கள் (முன்னர் பிணை வழங்கப்பட்ட 6 பேரும் சேர்த்து) ஒவ்வொரு மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவர்கள் தொடர்ந்து நன்னடத்தையில் ஈடுபடவேண்டும். வேறு குற்றங்களில் இவர்கள் ஈடுபட்டு மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டால் இவர்களுக்கான பிணையை மன்று மீளப் பெற்றுக்கொள்ளும் என நீதவான் கூறினார்.

இவர்கள் தொடர்பான வழக்கு ஜூலை மாதம் 21ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் குறிப்பிட்டார்.

புங்குடுதீவு மாணவியொருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ். நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தே மேற்படி அசம்பாவிதங்கள் இடம்பெற்றதுடன் இதன்போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X