2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பண்பாட்டால் மேம்பட்டவர்கள் தமிழர்கள் என்ற நிலை பாதுகாக்கப்படவேண்டும்: சந்திரகுமார்

Sudharshini   / 2015 ஜூன் 09 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

பண்பாட்டால் மேம்பட்ட தமிழ் சமூகத்தின் ஆணி வேரை அசைக்க முனையும் சக்திகளை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

யாழ் நல்லூர் ஜனசக்தி சனசமூக நிலையத்தின் 67ஆவது ஆண்டு விழா திங்கட்கிழமை (08) நடைபெற்ற போது, அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் கூறுகையில்,

யாழ்ப்பாணம் தமிழ் மக்களின் கலாசாரத்தை கட்டிக்காக்கின்ற தாய்நிலம். இங்கு சுமார் 1,000 பேருக்கு ஒன்று என்ற வகையில் ஆலயங்கள் அமையப்பெற்றுள்ளன, பெண்கள் மேம்பாட்டுக்கான மாதர் அமைப்புகள், 600 க்கும் மேற்பட்ட சனசமூக நிலையங்கள், கமக்கார அமைப்புகள் என பல பொது அமைப்புகள் செயற்படுகின்றன.

அண்மை காலங்களாக யாழ் மாவட்டத்தில் நடைபெறும் சில சம்பவங்கள் எமது சமூகத்தை வெட்கித் தலைகுனிய வைக்கும் அளவுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கலாசார புறழ்வுகளும் நடந்து வருகின்றன.

இங்கு ஒரு ஜனநாயகக் கட்டமைப்பு உள்ளது. அது சட்டம் ஒழுங்குகளால் பாதுகாக்கப்படுகின்றன. கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள், மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகள் தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர்.

சமய விழுமியங்களை வளர்க்கின்ற பிரசித்திப்பெற்ற ஆலயங்கள் காணப்படுகின்றன. மதத்தலைவர்கள் உள்ளனர், ஊடகங்கள் செயற்படுகின்றன. இவை அனைத்தையும் மீறி இவ்வாறான சமூகத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் சம்பவங்களும் நிகழ்கின்றதெனில் அதன் பொறுப்பை அனைவரும் ஏற்கவேண்டும்.

இன்று சில தரப்புக்கள் இந்தச் சம்பவங்களை திசை திருப்பிவிட்டு, பிறர் மீது பழியை சுமத்தி தப்பித்துக்கொள்ள முனைகின்றனர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இதற்காக மிகக்கடினமாக உழைக்க வேண்டும். அதற்காகவே மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்திருக்கின்றனர். எனவே எமது சமூத்தின் ஆணிவேரை அசைத்துப்பார்க்கும் சம்பவங்கள் இனியும் இடம்பெறாது தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுக்கு அயராது பாடுபடவேண்டும.; சமூக சீர்கேட்டுச் சம்பவங்களுக்கு பின்னணியாக செயற்படுபவர்கள் யார் என்பது மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வரப்படவேண்டும். அதற்கு எல்லோரும் சமூகப்பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.

இன்று நாளாந்தம் ஊடகங்களில் வரும் தகவல்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்களாக உள்ளன. பல ஊடகங்கள் வருமானத்தைபெறும் நோக்கில் முடிந்த நிகழ்வுகளை மர்மக்கதைகள் போல் எழுதிக்கொண்டிருக்கின்றன. சில ஊடகங்கள் ஊடக தர்மத்தை கடந்து செயற்படுகின்றன. எனவே, ஊடகங்கள் வருமானத்தை இலக்காக கொண்டு மட்டும் செயற்படாது சமூகத்தை பாதுகாக்கின்ற பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும்.

2009ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த சூழல் சமூக வன்முறையாளர்களை கட்டுப்படுத்தியிருந்தது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அன்று மிக இறுக்கமான சட்டத்திட்டங்கள் காணப்பட்டது. இன்று எற்பட்டுள்ள ஜனநாயக சூழலில் பேணப்பட்டு வரும் சட்ட நடைமுறைகள் அவ்வாறான இறுக்கமான சட்ட நடவடிக்கைகள் போன்று தீர்மானங்களை எடுக்கும் முறைமையைக் கொண்டதல்ல. பிரச்சினைகளை சரியாகக் கையாண்டு ஜனநாயக சட்ட விதிமுறைகளின் படியே தீர்மானங்களை எட்டவேண்டும்.
யுத்தத்துக்குப் பின் இன்று பெருமளவான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்பற்ற நிலையில் எதிர்காலத்துக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள். இதனால் அவர்களின் மனங்களில் ஏற்படும் விரக்தி நிலையும் அவர்களை மாற்றுத்திசைகளுக்கு இட்டுச்செல்ல வழிவகுக்கின்றன என்பது முக்கியமான விடயம்.

அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளில் அதிக அக்கறைகொண்டு செயற்பட்டு  அதனூடாக அனைவருக்கும் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கும் அனைவரும் பொருளாதாரத்தால் மேம்பட்ட நிலைமையை அடைவதற்குமான சூழலை  உருவாக்க வேண்டும். அதற்கு மக்கள் தங்களின் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும்.

புலம்பெயர் வாழ் எமது உறவுகள் பலர் வெளிநாடுகளில் தொழில் மையங்களை நிறுவி வெள்ளைக்கார்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி கொண்டிருக்கின்றனர். தமது சொந்த மண்ணில் வந்து முதலிட அவர்கள் முன்வருவதில்லை. எனவே, அவ்வாறானவர்கள் இங்கு வந்து முதலிட்டு சொந்த சமூகத்தை மேம்படுத்த பங்களிப்பு வழங்கவேண்டும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X