Editorial / 2020 ஜூலை 27 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
மக்களின் அபிவிருத்திக்காக வந்த பணத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் திருடியதுடன், மிகுதிப் பணத்தை திறைசேரிக்கு திருப்பி அனுப்பியமையாலேயே வடக்கில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள சுயேச்சை வேட்பாளர் முருகேசு சந்திரகுமார், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாமையால் இளைஞர்கள் இன்று சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனரெனவும் கூறினார்.
யாழ்ப்பாணத்தில், நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியிலிருந்த வடமாகாண சபைக்கு மக்கள் அபிவிருத்திக்காக கோடிக்கணக்கான பணம் வந்ததெனவும் அதனை கூட்டமைப்பினர் திருடியதுடன் மிகுதிப் பணத்தை திறைசேரிக்கு திருப்பி அனுப்பினார்களெனவும் கூறினார்.
இதனால் வடக்கில் எதுவித அபிவிருத்திகளும் ஏற்படவில்லையெனத் தெரிவித்த அவர், வேலைவாய்ப்புகளும் உருவாக்கிக் கொடுக்கப்பட வில்லையெனவும் இதனால் ஏராளமான இளைஞர்கள் தொழிலை இழந்து இன்று சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
“அதுமட்டுமல்லாது ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்மை காரணமாக வாழ்க்கையை இழந்து நிற்கின்றனர். குறிப்பாக, திருமணங்கள் செய்து கொள்ள முடியாத நிலைமையில் கூட இளைஞர்கள் இருக்கின்றனர். வடக்கில் எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை.
“மாறாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மக்களின் அபிவிருத்திக்காக வந்த நிதியை மோசடி செய்த உடன் மிகுதிப் பணத்தை திருப்பி அனுப்பினார்கள். வாக்களித்த மக்களுக்காக அவர்கள் எதனையும் செய்யவில்லை. இதனை மக்கள் அறிந்துள்ளனர். இந்த தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” எனவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .