2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு: யாழில் கைதானவர்களிடம் மீட்கப்பட்ட விலையுயர்ந்த நாய்

Janu   / 2025 நவம்பர் 10 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-13  கொட்டாஞ்சேனை பகுதியில் வெள்ளிக்கிழமை (07) இரவு வீதியில் நடந்து  சென்று கொண்டிருந்த ஒருவரை, அவருக்கு பின்னால் மிக அருகில் வந்தவர், சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிதாரி, அந்த காரில் ஏறி, கீழே விழுந்து கிடந்தவர் மீதும் ஏற்றி, தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்துள்ளன.

துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற கார், கொழும்பு ஆமர் வீதியில் கைவிட்டு விட்டு, பிறிதொரு காரில் சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் காரொன்றை வாடகைக்கு பெற்று வடக்கு நோக்கி தப்பி சென்றதை அறிந்த பொலிஸார்,   வாடகைக்குக் கொடுத்த நிறுவனத்தினை கண்டறிந்து, அவர்களிடம் இருந்து கார் தொடர்பான தகவல்களைப் பெற்றுள்ளனர்.

அதன் அடிப்படையில், காரில் பொருத்தப்பட்டிருந்த GPS உதவியுடன் காரை கண்காணித்த வேளை கார், மானிப்பாய் பகுதியில் நிற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கொழும்பைச் சேர்ந்த பொலிஸ் குழு அறிவித்தது.  சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடுப்பு பிரிவினர், மானிப்பாய் பகுதியில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றில் காரை கண்டு பிடித்துள்ளனர்.

காரை மீட்ட பொலிஸார் காரில் பயணித்த மூவரையும், வாகன திருத்தக உரிமையாளரையும் கைது செய்ததுடன், அவர்களால் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட அவர்களின் வளர்ப்பு நாயையும் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

வாகன திருத்தக உரிமையாளரிடம் முன்னெடுத்த விசாரணையில், காரில் குளிரூட்டி (AC) வேலை செய்யவில்லை என அதைத் திருத்தம் செய்யவே காரை கொண்டு வந்தார்கள் என தெரிவித்துள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில்,  காரை திருத்தவே திருத்தகம் போனார்கள் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியதை அடுத்து திருத்தக உரிமையாளரை விடுவித்துள்ளனர்.

அதேவேளை, காரில் பயணித்த நிலையில், கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட மூவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது, தாம் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்ததாகவே கூறியுள்ளனர். காரில் இருந்து மீட்கப்பட்ட நாய் வளர்ப்பு நாய் எனவும், கைது செய்யப்பட்ட பெண், கைதான  ஆணொருவரின் காதலி என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கொழும்பில் இருந்து  சனிக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பொலிஸ் விசேட குழு, கைது செய்யப்பட்ட மூவரையும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் , அவர்கள் பயணித்த கார் மற்றும் அவர்களின் வளர்ப்பு நாய் என்பவற்றையும் கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X