2025 ஜூன் 25, புதன்கிழமை

சான்றுப் பொருள் திருட்டு : மூவருக்கு சிறை

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 14 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சான்றுப்பொருட்கள் அறையை உடைத்து, கேரளக் கஞ்சாவைத் திருடிய குற்றவாளிகள் மூவருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (14)  தீர்ப்பளித்தார்.

அத்துடன், குற்றவாளிகள் மூவரும் தலா 3 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும். அதனை செலுத்தத் தவறின் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

2015 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சான்றுப்பொருள்கள் அறை உடைக்கப்பட்டு 27 இலட்சம் ரூபாய் பெறுமதியான 12 பொதிகளாக கட்டப்பட்டிருந்த சான்றுப்பொருளான கேரளா கஞ்சா திருடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா பிரசாந்தன் அல்லது குமா அல்லது குகன், பத்மநாதன் தர்சன் மற்றும் கணேசன் நதீஸ்வரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 7 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் 2 கைக்கோடரிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்களிடம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்று சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழக்கேடுகள் கையளிக்கப்பட்டன.

சந்தேகநபர்கள் மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் தனித்தனியே குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன், அரச சொத்தைத் திருடிய குற்றச்சாட்டுக்கு மூவருக்கு எதிராகவும் தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மூவரும் குற்றத்தை ஏற்றுக் கொண்டதையடுத்து, நீதிபதி சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதேவேளை, கடந்த 7ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கஞ்சாவை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை சந்தேகநபர்கள் மூவரும் மன்றில் ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து நீதிபதி தண்டப்பணம் செலுத்த உத்தரவிட்டிருந்தார். எனினும் குற்றவாளிகள் தண்டப்பணம் செலுத்த தவறியதால், 6 மாதங்கள் மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .