2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நல்லூர் மகோற்சவ காலத்தில் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்

Princiya Dixci   / 2022 ஜூலை 27 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், வி.நிதர்ஷன்

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்தப் திருவிழா எதிர்வரும் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ். மாநகர சபையால் விளக்கமளிக்கப்பட்டது.

மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், யாழ். மாநகர சபையில் நேற்று (26) இடம்பெற்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொரோனா தொற்று காரணமாக, கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நல்லூர் மஹோற்சவம், வழமைபோன்று அதாவது 2018ஆம் ஆண்டுக்கு முன்பு எவ்வாறு உற்சவம் நடந்ததோ அதேபோல இம்முறை இடம்பெறுமென யாழ். மாநகர மேயர் மணிவண்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஓகஸ்ட் 1ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் கோவில் சுற்றுவீதிகளில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டு, ஓகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும். 

“கோவில் வெளி வீதியைச் சூழ கோவில் நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.

“அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. அத்துடன், ட்ரோன் கமெராக்களை பயன்படுத்தி, காணொளி பதிவு செய்ய முடியாது.

“காலணிகளுடன் கோவில் வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது. ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக்  நிறைவேற்ற வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் கோவிலின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும்.

“அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

“வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள், யாழ். மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து, யாழ் நகரை அடைய முடியும். ஆனால், இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது, கச்சேரி - நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும்.

“முகக்கவசங்களை அணிவது சட்டமாக்கப்படவில்லை. இருந்த போதும் கொரோனா எச்சரிக்கை காணப்படுவதால் முகக்கவசங்களை அணிந்து தன்னெழுச்சியாக சுகாதார விதிமுறைகளை பக்தர்கள் பின்பற்றவேண்டும்.

“திருட்டுகளை தவிர்க்க, நல்லூர் கோவில் சூழலில் யாழ். மாநகர சபையினால் கண்காணிப்புக் கமெராக்கள் பொருத்தப்படும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .