2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நான்கு மாத சினைப்பசு இறைச்சியாக்கப்பட்டது

Freelancer   / 2022 மே 27 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழப்பாணம் வலி.மேற்கில் நான்கு மாத சினைப்பசுவைத் திருடி, அதை இறைச்சியாக்கி விற்பனை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

பொன்னாலை வயலில் கட்டிநின்ற பசு மாடு ஒன்றே இரவோடிரவாக திருடப்பட்டு இவ்வாறு இறைச்சியாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இச்செயலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான விபரங்களை வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தெரியப்படுத்திய போதிலும் அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து அகில இலங்கை சைவ மகா சபைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னாலையைச் சேர்ந்த பா.பராபரன் என்பவரின் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நான்கு மாத சினைப்பசு பொன்னாலையில் உள்ள அவரது வயற்காணியில் ஏனைய மாடுகளுடன் கட்டப்பட்டிருந்தது. 

கடந்த (21) சனிக்கிழமை இரவு குறித்த மாடு காணாமற்போயிருந்தது.

இது தொடர்பாக மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

தொடர்ந்து உரிமையாளர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கும் சென்று, இறைச்சியாக்கும் மாடுகள் உள்ள இடங்களில் தேடியுள்ளனர். எனினும் மாடு கிடைக்கவில்லை.

இதையடுத்து, பொன்னாலை பெரியகுளத்திற்கு சமீபமாக, நாகதம்பிரான் ஆலயத்திற்கு அருகே மாட்டின் தோல், மாடு கட்டப்பட்டிருந்த கயிறு, எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அயல் ஊரைச் சேர்ந்த சிலர் மாட்டினை இறைச்சியாக்கி முச்சக்கரவண்டியில் இறைச்சியை ஏற்றிச்சென்று விற்பனை செய்யப்பட்டமையும் பின்னர் தெரியவந்தது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள், இதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் இறைச்சிய வாங்கியவர்களின் பெயர் விபரங்கள் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு வழங்கப்பட்டன.

எலும்பு, தோல் என்பவற்றை வீட்டிற்கு கொண்டுசென்று வைத்திருங்கள். தாங்கள் விசாரணை நடத்துகின்றோம் என பொலிஸார் கூறினர் எனவும் இதுவரை அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மாட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

பொலிஸார் வரவில்லை, வீட்டில் வைக்கப்பட்டுள்ள மாட்டின் எச்சங்கள் துர்நாற்றம் வீசுகின்றன. எமக்கு நீதியை வழங்க நடவடிக்கை எடுங்கள் எனத் தெரிவித்து மாட்டின் உரிமையாளர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை, பசுவதை மற்றும் குறி சுடுதலுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல்கொடுத்துவரும் அகில இலங்கை சைவ மகா சபையின் கவனத்திற்கும் இந்த விடயத்தை கொண்டுசென்றுள்ளனர்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .