2025 ஜூலை 02, புதன்கிழமை

‘பருத்தித்துறை மீனவர்களுக்கு பயிற்சி வழங்கவும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதோடு நின்றுவிடாமல், தமது மீனவர்களே அதனை பயன்படுத்தும் வகையில் படகுகள், பயிற்சிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

பருத்துறைதுறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் இன்று ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், “இந்த துறைமுக அபிவிருத்தி பணிகள் தொடங்கப்பட்ட பாலத்தில் பல்வேறு குழப்பங்கள் காணப்பட்டன. அவை தொடர்பாக பல தடவைகள் நாம் இங்குவந்து பேசிய நினைவுகள் இருக்கிறது.

“இன்று இந்த துறைமுகம் எந்தக் குழப்பமும் இல்லாம் மக்களுடைய விருப்பத்துடன், அபிவிருத்தி செய்யப்படுவதை நான் மகிழ்வுடன் பார்க்கின்றேன். இறுதி நேரத்தில் எழுந்த குழப்பங்களை தீர்த்துவைத்த ஆளுநருக்கும் நான் இந்த இடத்தில் நன்றி கூறுகிறேன். 

“சுமார் 175 மில்லியன் ரூபாய் செலவில் இந்த துறைமுகம் புனரமைப்பு செய்யப்படுகின்றது. முதல்கட்டமாக 80 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்படவுள்ளது.

“மிக பெருமளவு முதலீட்டின் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம் எமது பருத்துறை மக்களுக்கு, மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக அமையும். 

“சரித்திர காலம் தொடக்கம் இந்த துறைமுகம் ஒரு வியாபார துறைமுகமாக இருந்துவந்துள்ளது. இங்கே சுங்க அலுவலகங்கள் இயங்கிக் கட்டடங்களை இப்போதும் காணலாம். மேலும் பருத்தி ஏற்றுமதியில் முக்கிய இடத்தை கொண்டிருந்தமையே, இந்த ஊருக்கு பருத்திதுறை என பெயர்வர காரணமும் ஆனது. 

 

“ஆகவே, இப்போது அபிவிருத்தி செய்யப்படும் இந்த துறைமுகம் எங்களுடைய மக்களால் பூரணமாக பயன்படுத்தப்பட வேண்டும். இங்குள்ள மீனவர்களை காட்டிலும் இந்த துறைமுகத்தால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் நன்மையடைவார்களோ என்ற அச்சம் மீனவர்களிடம் இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றது. 

“ஆனால், எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியை எமது மீனவா்கள் அனுபவிக்க வேண்டும். ஆனால் சில ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாக ஆளுநர் கூறினார். அது மகிழ்ச்சியான விடயம். இந்த துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான தீர்மானத்தை எடுத்தமைக்காக நான் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறேன். 

“காலத்துக்கு காலம் பொறுப்பு வகித்த கடற்றொழில் அமைச்சர்களும் கூட இந்த துறைமுக அபிவிருத்தி விடயத்தில் மிக தெளிவாக இருந்தனர். அவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நான் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். அதேபோல் அரசாங்கம் விசேடமாக துறைசார் அமைச்சு இந்த துறைமுகத்தை எமது மீனவர்கள் பயன்படுத்தகூடியவாறு, எமது மீனவர்களுக்கு பாரிய படகுகள், பயிற்சிகளை வழங்க முன்வரவேண்டும். கடல்வளத்தை கொண்டு எங்கள் பொருளாதாரத்தை நாங்களே கட்டியெழுப்பவேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .