2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மணிவண்ணனின் பதவி விவகாரம்: நாளை தடை உத்தரவு வழங்கப்படும்?

Niroshini   / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை, அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கான இடைக்காலத் தடை உத்தரவை, நாளை  புதன்கிழமை  வழங்குவதாக, யாழ்ப்பாணம் மாவட்டம் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தேர்ந்து அனுப்பப்பட்ட வி.மணிவண்ணன், தமது பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதால், மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு அந்தக் கட்சி யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கேட்டுக்கொண்டது.

அதனடிப்படையில், வி.மணிவண்ணன் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவி வறிதாகியதாக, யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரால் மணிவண்ணனுக்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தனது உறுப்புரிமை நீக்கத்தை சவாலுக்குட்படுத்தி, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சிறப்பு மனுவை தாக்கல் செய்தார்.

மனுவின் பிரதிவாதிகளாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகர் உள்ளிட்டோரைக் குறிப்பிட்டிருந்தார்.

தனது பதவி நீக்கத்தை சட்ட வலுவற்றதாக உத்தரவிடுமாறு கோரிய மனுதாரர், அதன் மீதான விசாரணை நிறைவடைந்து இறுதிக் கட்டளை வரும் வரை, அதற்கான இடைக்காலத் தடை உத்தரவை வழங்குமாறும் கோரியிருந்தார்.

இந்நிலையில், இந்த மனு, யாழ்ப்பாணம் மாவட்ட நீதவான் வி.இராமக்கமலன் முன்னிலையில், இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரின் விண்ணப்பம் தொடர்பில் ஆராய்ந்து, நாளை அதற்கான இடைக்காலத் தடை உத்தரவு வழங்கப்படுமென்று உத்தரவிட்டு, வழக்கை நீதவான் ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .