2025 மே 23, வெள்ளிக்கிழமை

'இலங்கையர் வெளியேற வேண்டும்' என கோசம் எழுப்பியவாறு தாக்குதல் நடத்தப்பட்டது: நாடு திரும்பிய யாத்திரிக

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ், ஜூட் சமந்த)

'இலங்கையர்கள் வெளியேற வேண்டும்' என கோசம் எழுப்பியவாறு திருச்சியில் எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். நாம், 'அண்ணா எங்களை அடிக்காதீர்கள்! அடிக்காதீர்கள்!' என அலறியதை அடுத்து, 'இவர்கள் தமிழில் பேசுகின்றனர், இவர்களை இனி அடிக்காதீர்கள்' என்று கூறி ஒருசிலர் அங்கிருந்து ஒதுங்கிச் சென்றனர் என நாடு திரும்பிய யாத்திரிகர்களில் சிலர் தெரிவித்தனர்.

திருச்சியிலுள்ள வேலாங்கணி தேவாலயத்துக்கு சென்ற யாத்திரிகர்கள் திருச்சி, பூண்டுலூர், வேலாங்கணி பகுதிகளில் தாக்கப்பட்டதினையடுத்து நேற்று இரவு 11.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்தனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்களில் பலர் சிலாபம், கடற்கரைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களுள் சிலாபம் நகரசபை உறுப்பினர்கள் ஐவரும் உள்ளடங்குவர்.

திருச்சியில் நடைப்பெற்ற சம்பவம் தொடர்பில் சிலாபம் நகரசபை உறுப்பினரான பெனடிக் ஜோசப் கருத்து தெரிவிக்கையில் 'நாங்கள் கடந்த 2ஆம் திகதி நேர்த்திக்கடன்களைச் செலுத்துவதற்காக திருச்சி சென்றோம். அன்று மாலை ஒரு கும்பல் வந்து இலங்கையர் வெளியேற வேண்டுமென கோசம் எழுப்பினர்.

பின்னர் அன்றிரவு இரண்டு மணிக்கு அங்கிருந்து தேவாலயம் அமைந்துள்ள நாகப்பட்டினம் பகுதிக்கு பொலிஸாரின் உதவியுடன் சென்றோம். அங்கும் ஒரு கும்பல் எமக்கெதிராக கோசமிட்டனர்.

அதனையடுத்து நாம் அங்கிருந்து பிரதியமைச்சர் நியோமல் பெரேராவுக்கு தொடர்புகொண்டு விடயத்தைத் தெரிவித்தோம். அப்போது அவர், எம்மை அங்கிருந்து உடன் நாடு திரும்புமாறும் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய சிறப்பு விமானமொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கமைய நாம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தந்துகொண்டிருந்த போதுதான் நாங்கள் வந்த பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டதுடன், யாத்திரர்களும் தாக்கப்பட்டனர். இதனால் பெண்களும், சிறுவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் 'இலங்கையர் வெளியேற வேண்டும்' என கோசம் எழுப்பியவாறு தாக்குதல் நடத்தினர்' என அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பெண் யாத்திரிகர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 'எங்களைத் தாக்கிய போது நாங்கள் 'அண்ணா எங்களை அடிக்காதீர்கள்! அடிக்காதீர்கள்! என அலறினோம். இதனையடுத்து எம்மைத் தாக்கியவர்கள் 'இவர்கள் தமிழில் பேசுகின்றனர், இவர்களை இனி அடிக்க வேண்டாம்' எனக்கூறி அவ்விடத்திலிருந்து ஒருசிலர் சென்றுவிட்டனர்.

நாங்கள் சுற்றுலாவுக்காகவோ அல்லது வியாபாரத்துக்காகவோ இந்தியா செல்லவில்லை. மதக் கடமையினை நிறைவேற்றவே அங்கு சென்றோம். இவ்வாறானதொரு நிலைமையிலேயே எம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தினையடுத்து பிரதியமைச்சர் உரிய நடவடிக்கையினை துரிதமாக மேற்கொண்டு நாங்கள் இலங்கை வந்தவுடன் எங்களினை வரவேற்று நடந்த சம்பவம் தொடர்பில் நேரடியாக கதைத்ததுடன் ஆறுதலும் கூறினார்' என்று அப்பெண் கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • srikanken Thursday, 06 September 2012 06:34 AM

    காடையர்களின் செயலால் முலு இந்தியாவிட்கும் கெட்டபெயர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X