-எம்.எஸ்.முஸப்பிர்
ஆனமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்தேகம எனும் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை 3 மணியளவில் பரமாகந்தை விகாரை வீதியின் மத்தேகம எனும் பிரதேசத்தில் ரண்பண்டா திசாநாயக்கா என்பவரின் வீட்டின் பின்புறத்திலேயே இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று மாலை 3 மணயளவில் குறித்த இடத்தில் அமைந்துள்ள மானா புல் நிறைந்துள்ள பகுதியில் தீ பற்றிக் கொண்டிருந்துள்ளது. இவ்வாறு தீயில் புல்வெளி எரிந்து கொண்டிருக்கையில் திடீரென பாரிய வெடிப்புச் சப்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பில் ஆனமடு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த புல் பற்றைக்குள் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்று கிடந்து அதுவே தீயில் வெடித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்ட பொலிஸார், அது கைக்குண்டுதானா அல்லது வேறு ஏதேனுமா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.