2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புதிய வணிகத்தை ஆரம்பிப்பதிலுள்ள சவால்கள்

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நிலையில், வணிகமொன்றை ஆரம்பிப்பதென்பது குதிரைக்கொம்பான விடயமொன்றாகும். பொருளாதார நிலையற்றதன்மை, கேள்விக்குறியான எதிர்காலம், அரசாங்கத்தால் மிக விரைவாக மாற்றப்படும் சட்டதிட்டங்கள் என்பவற்றின் காரணமாக, புதிய வணிகமொன்றை ஆரம்பிப்பதும், அதை கொண்டு நடத்துவதும் மிகப்பாரிய சவாலான விடயமாக மாறியிருக்கிறது. 

ஆனால், வர்த்தகத்தின் பார்வையில் பார்க்கின்றபோது, இந்த சமயம்தான் வணிகமொன்றை ஆரம்பிக்கச் சிறந்ததாக இருப்பதுடன், எதிர்காலத்தில் பொருளாதார மேம்பாடு ஏற்படுகின்ற சமயத்தில் வணிகத்தின் வெற்றியை மிகப்பாரிய அளவில் அறுவடை செய்ய முடியுமெனவும் கருத்தறியப்படுகிறது. அப்படியாயின், நெருக்கடியான சூழ்நிலைகளின் மத்தியிலும் ஒரு வணிகத்தை ஆரம்பித்து, அதன் அடிப்படைகளை எவ்வாறு வகுத்துக்கொள்ள வேண்டுமென்பதையும் அறியவேண்டியது அவசியமாகிறது. 

புத்தாக்க சிந்தனைகள்/எண்ணங்கள்

தொடக்கநிலை வணிகத்தை ஆரம்பிக்க விரும்பும் எவருக்குமே அல்லது புத்தாக்கச் சிந்தனை கொண்ட எவருக்குமே, பொதுவான குறைபாடுகளில் இதுவும் ஒன்று. அதாவது, தங்களுடைய புத்தாக்க எண்ணமே மிகச்சிறந்ததும் வெற்றிகரமானதும் என நம்புகின்ற தன்மையாகும். நிச்சயம் ஒவ்வொரு முயற்சியாளர்க்கும் தன்னுடைய புத்தாக்க எண்ணங்கள் மீது நம்பிக்கை இருக்கவேண்டும். ஆனால், அதுவே அதீத நம்பிக்கையாக மாற்றம்பெற்று, வணிகத்தை அழித்துவிடவும் கூடாது. 

இலங்கையில் வணிக முயற்சியாளர்களுக்குள் இருக்கக்கூடிய மிகப்பெரிய பயமும் பலவீனமும் தமது எண்ணங்களை ஏனையவருடன் பகிர்ந்துகொள்ளுவதில்தான் உள்ளது. எங்கே, அடுத்தவர் தமது புத்தாக்கச் சிந்தனையை வியாபாரமாக மாற்றி, தம்மிடமிருந்து களவாடிக்கொண்டு போய்விடுவார்களோ எனும் பயமே, இதற்கு முதல் காரணமாகும். ஆனால், வணிகத்தின் மீது முதலீடு செய்ய விரும்பும் எவருமே, முயற்சியாளர்களின் எண்ணங்களைத் திருட விரும்புவதில்லை. மாறாக, அதில் முதலீடு செய்து உட்ச இலாபத்தைப் பெற்றுக்கொள்ளவே எதிர்பார்ப்பார்கள். எனவே, புத்தாக்கச் சிந்தனையாளர்கள், சிறந்த முதலீட்டாளர்களை இனங்கண்டு, தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், தமது எண்ணங்களை மீளவும் உறுதிசெய்து (Validate) கொள்ள முடியும். 

இலங்கையைப் பொறுத்த வரையில், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து சிறிய சந்தையாகவே உள்ளது. எனவே, இங்கு பல சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் திசை திரும்புவது குறைவு எனும் எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், அது முற்றிலும் தவறு என, கடந்தகாலச் செயற்பாடுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடத்தில் இடம்பெற்ற புத்தாக்க வணிகங்கள் தொடர்பிலான சர்வதேச நிறுவனங்களால் ஒழுங்கமைக்கபட்ட கூட்டங்களே இதற்குச் சான்றாக உள்ளது. எனவே, புத்தாக்க முயற்சியாளர்களும் தனித்து இலங்கையில் நடைமுறைக்குச் சாத்தியமான வணிகங்களை மாத்திரம் உருவாக்காமல், அதையும் தாண்டியதாக வியாபாரங்களை வடிவமைத்து கொள்வதன் மூலமாக சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கவும் முடியும். 

உற்பத்தி சேவையும் சந்தைத் தேவையும்

வணிக முயற்சியாளர்களின் சிந்தனையும் வணிகமும் எவ்வளவு உயர்ந்தவையாகவும் தனித்துவதன்மை வாய்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால், அவை சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்வதாக அல்லது சந்தையிலுள்ள வாடிக்கையாளர்களின் தேவையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வெளியீடாக அமையவேண்டும்.  

பெரும்பாலான தொடக்கநிலை வணிகங்கள் ஆரம்பிக்கும் போதே, தமக்கான வாடிக்கையாளர் வலையமைப்பை ஆரம்பம் முதலே கட்டியெழுப்ப வேண்டும் என எண்ணுகின்றது. இதனால், அதற்காக அதிக நேரத்தையும் பணத்​ைதயும் செலவிட வேண்டியதாக அமைகிறது. பல சந்தர்ப்பங்களில் அது பயனுள்ளதாக உள்ளபோதிலும், சில சந்தர்ப்பங்களில் போட்டியாளர்கள் சந்தையில் சிறிய மாற்றத்துடன், உள்நுழைய அது இலகுவாகிவிடுகிறது. 

எனவே, புத்தாக்க முயற்சியாளர்கள் தனியே வாடிக்கையாளர் வலையமைப்பை உருவாக்க நேரத்தையும், பணத்தையும் செலவிட்டுக் கொண்டிருக்காமல், ஏற்​ெகனவே உருவாக்கப்பட்ட வலையமைப்பில் எவ்வாறு தங்களுடைய உற்பத்திகளையும் சேவைகளையும் சந்தைத் தேவைக்கு ஏற்றால்போல மாற்றியமைத்து கொடுக்க முடியும் என அறிந்துகொள்வது அவசியமாகும். இது மிக இலகுவாக சந்தையில் தம்மை நிலை நிறுத்திக்கொள்ள உதவும் 

வர்த்தக அடிப்படைகளை புரிந்துகொள்ளுதல் (Business Basics)

தொடக்கநிலை வணிகங்கள் எப்போதுமே புத்தாக்க சிந்தனையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகிறது. ஆனால், அந்தச் சிந்தனைகள் முறையான வர்த்தக அடிப்படையில் இயங்கும்போது மாத்திரமே வெற்றிகரமாக மக்களைச் சென்றடைய முடியும். 

தொடக்கநிலை வணிகங்களுக்கான புத்தாக்கச் சிந்தனையைக் கொண்டிருக்கும் பல வணிகங்களும் கொண்டிருக்கக் கூடிய மிக முக்கியமானப் பிரச்சினை புத்தாக்கச் சிந்தனையை எப்படி வியாபாரமாக மாற்றுவது என்பதேயாகும். அடிப்படையில் எவ்வாறு வணிகத்தைத் தொழிற்படச் செய்வது, எப்படி பாதீட்டைக் கையாள்வது, எப்படி வாடிக்கையாளர்கள், வழங்குநர்களைக் கையாள்வது,  சரியான முடிவுகளை எவ்வாறு மேற்கொள்வது  என வணிகங்களுக்கு உரித்தான அடிப்படை விடயங்களில் மேற்கொள்ளும் தவறுகள் ஒட்டுமொத்த வணிகத்தையுமே சந்தையிலிருந்து ஓரங்கட்டி விடுகின்றது.  எனவே, தொடக்கநிலை வணிக முயற்சியாளர்கள் வணிகத்தை ஆரம்பிக்க முன்னரே, வணிகத்தை அடிப்படை தன்மைகளையும், சந்தை தொடர்பிலும் சரியாகப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. இது வளப்பயன்பாட்டில் வினைத்திறன் தன்மையை அதிகரிப்பதுடன், தொடர்ச்சியாக சந்தையில் தொடக்கநிலை வணிகம் நிலைத்திருப்பதையும் உறுதி செய்கிறது. 

முதலீடு, நிதி திரட்டல்

இலங்கையின் தொடக்கநிலை வணிகங்கள் சந்திக்கும் சாதாரணமான பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. எப்படி வணிகத்தைக் கொண்டு நடாத்துவதற்கான பணத்தைப் பெற்றுகொள்ளுவது, எப்படி முதலீட்டு நிதியை திரட்டுவது, எப்படி மூலதனப் பங்​ைக (Capital Share) முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பதே ஆகும். 

ஏனைய வணிகங்கள் போலல்லாது, புத்தாக்க வணிகங்கள் வெற்றிகரமான நிலையை அடையும் வரை அல்லது அடைந்த பின்பும் கூட தொடர்ச்சியாக முதலீடுகள் அவசியமாகும். எனவே, ஒவ்வொரு முதலீட்டு நிதி திரட்டலின்போதும், மூலதனப் பங்கை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்துகொள்கின்றபோது, ஒரு நிலையில் வணிகத்தை இழக்கவேண்டிய நிலை கூட ஏற்படலாம். இத்தகைய நிலையை கையாள இன்றைய வணிக முயற்சியாளர்கள் எவ்வாறு தயாராக இருக்கிறார்கள் என்பதே கேள்விகுறியாக உள்ளது. 

முயற்சியாளர்கள் எப்போதுமே தமது வணிகத்தின் வெற்றிக்காக ஆத்மார்த்தமாக செயற்படுவார்கள். அதுவும், வளர்ச்சி நிலையில் அதிக முதலீடு தேவைப்படும்போது, அதை எவ்வாறாவது பெற்றுக்கொண்டு வணிகத்தின் தொடர்ச்சியாக இயங்க வைக்கவே விரும்புவார்கள். எனவே, அந்த நிலையில் மூலதன பங்கை அதிகளவில் இழக்கவேண்டிய சூழ்நிலை உருவாகலாம். இந்த நிலையில், வணிக முயற்சியாளர்கள் அதிக கவனத்துடன் செயற்படவேண்டியது அவசியமாகும். இல்லை​ெயனில், வணிகமானது வெற்றிகரமான லாபத்தை தரும்நிலையில் அதனை அனுபவிக்ககூடிய அதிக முதலீட்டு பங்கை முயற்சியாளர் கொண்டிருக்கமாட்டார். 

பொருத்தமான அணியை கட்டியெழுப்பல் (Build a Team)

தொடக்கநிலை வணிகங்களில் கடினமான பகுதிகளில் ஒன்று, சிந்தையில் உதித்த சரியான எண்ணங்களை (Ideas) எவ்வாறு நிஜத்தில் நிகழ்த்திக்காட்டுவது என்பதேயாகும்.பெரும்பாலான தொடக்கநிலை வணிகமுயற்சிகள் ஆரம்பித்த இடத்திலேயே முடிந்துபோவதற்கு காரணம் முயற்சியாளர்களிடமும் சரி, முதலீட்டாளர்களிடமும் சரி போதிய பொறுமையின்மையே ஆகும். நடைமுறைபடுத்தும் வணிகத்திட்டங்களுக்கு, சந்தை பொருத்தமான சமிக்ஞையைக் காட்டாதபோது, அதற்கேற்ப செயலாற்றாமையானது அல்லது அதற்கேற்ப தங்கள் வணிகத் திட்டங்களை மாற்றியமைத்துக்கொள்ளாமை என்பனவும் வணிகத்தின் தோல்வி நிலைக்கு வழிவகுக்கிறது. 

இந்த நிலையைத் தவிர்ப்பதற்கு, ஒரு முயற்சியாளனாக எத்தகைய திறமைகள் (skill) வணிக எண்ணத்தை (Business Idea) வெற்றிகரமான வணிகமாக (Startup/Business) மாற்றும் என அறிந்திருப்பது அவசியமாகும். குறித்த திறன்கள் முயற்சியாளரான என்னிடம் உள்ளதா, இல்லையெனில் என்னுடைய பங்குதாரர்களிடம் (Partners) உள்ளதா, அல்லது அதற்கேற்ற பொருத்தமான அணியை தேர்வு செய்ய வேண்டுமா என்பதைக் கண்டறிய வேண்டும். 

அவ்வாறு தனக்கான அணியை உருவாக்க விரும்பும் முயற்சியாளர்கள் பொருத்தமான திறன் உடையவர்களைக் கண்டறிவது அவசியமாகும். அதுபோல, தனது அணியை அல்லது ஊழியர்களை தக்கவைத்துக் கொள்வதும் அவசியமாகும். எப்படி முயற்சியாளர்களின் முயற்சிகள் பெறுமதியானவையோ, அதுபோல ஊழியர்களின் திறனும் (Labour Skill) பெறுமதியானவை. தமது எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பவர்களின் திறனுக்கு சமரசம் செய்துகொள்ளக்கூடிய மலிவான ஊதியத்தில் (Cheap Incentives) ஊழியர்களை எதிர்பார்ப்பது எதிர்காலத்தில் வணிகத்தையே பாதிக்கும். எந்தவொரு திறமை படைத்த நபரும் வணிக உலகில் இலவசமாக வேலை செய்யத் தயாராக இல்லை. ஆனால், அத்தகைய திறமையாளர்களைத் தொடக்கநிலை வணிகங்களில் உள்வாங்கும்போது வணிகத்தோடு சேர்ந்து நாமும் வளர்கிறோம் எனும் உணர்வை முயற்சியாளர்கள் தங்கள் அணிக்கு/ஊழியர்களுக்கு சரியான விதத்தில் கடத்துவார்களாயின், வெற்றிகரமான வணிகத்தின் ஆணிவேராக அவர்கள் நிச்சயம் இருப்பார்கள். 

இலங்கையின் தொடக்கநிலை வணிக கலாசாரமானது, வேகமாக வளர்ந்து வருவதுடன், அது, தனக்கென ஒரு பிரத்தியேகத் தரகுறியீட்டையும் உருவாக்கி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில், ஆரம்பகாலத்தில் இவ்வாறு தொடக்கநிலை வணிகங்கள் ஆரம்பித்தபோது, அனைத்துமே வெற்றிக்கரமாக வலம்வந்ததோ, அதேபோல தற்போதைய நிலையில் ஆரம்பிக்கும் வணிகங்களில் பெரும்பாலானவை குறைந்தது ஒரு வருடத்துக்குள்ளாகவே மூடப்படுகின்றது. இத்தகைய நிலை, எதிர்வரும் காலங்களில் இலங்கையிலும் ஏற்படக்கூடும். இதை தடுப்பதற்கு, வணிக முயற்சியில் ஆர்வம்கொண்ட முயற்சியாளர்களுக்கு தொடக்கநிலை வணிகங்களின் அடிப்படைகளையும், உண்மைதன்மையையும் (Reality) வெளிபடுத்தவேண்டியது அவசியாமாகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .