
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றை நாணயப்பரிமாற்றல் நடவடிக்கைகளின் போது, 130ஐ விட அதிகரித்து 130.90 என பதிவாகியிருந்தது.
கடந்த ஒரு வருட காலப்பகுதியில் பதிவாகிய வீழ்ச்சியான பெறுமதி இதுவென சந்தை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இந்த நிலை குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கருத்து தெரிவிக்கையில், மக்கள் இது குறித்து நிலை குலையத் தேவையில்லை. உயர்ந்த விலையில் அமெரிக்க டொலரை கொள்வனவு செய்வோர் நஷ்டத்தை எதிர்நோக்குவார்கள். நேற்றைய தினம் கொடுக்கல் வாங்கல்களின் போது ரூபாவின் பெறுமதி 130.90 ஆக பதிவாகியிருந்தது என்றார்.
இந்த வார திறைசேரி கொடுக்கல் வாங்கல்களில் பெருமளவான முதலீட்டாளர்கள் நீண்ட கால முறிகளை விற்பனை செய்து குறுங்கால முறிகளில் முதலீடுகளை மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு மொத்தம் 15 பில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளை இவர்கள் கொள்வனவு செய்திருந்தனர்.
பணச்சந்தையில் அதிகளவு திரள்வுத்தன்மை காணப்படுகின்றமையும், மத்திய வங்கியின் தலையீடு குறைந்தளவில் காணப்படுகின்றமையும் இந்த பெறுமதி வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.