2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேயிலை செய்கையாளர்களுக்கு கொமர்ஷல் வங்கி உதவி

S.Sekar   / 2022 மே 20 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை மற்றும் தெனியாய பகுதிகளில் நான்கு தேயிலை கழகங்களைச் சேர்ந்த 532 தேயிலை செய்கையாளர்களுக்கு 'திரிசக்தி' அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கொமர்ஷல் வங்கி நிதி உதவிகளை வழங்கி உள்ளது.

கிராமிய பெறுமான சங்கிலித் தொடர் நிலைத்தன்மையை பேணும் வகையிலும் மற்றும் அதன் ஆற்றலை அதிகரிக்கும் வகையிலும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டம் நவீன தொழில்நுட்ப அபிவிருத்திகளில் கவனம் செலுத்துகின்றது. தேயிலை தொழில்துறையின் உற்பத்தி ஆற்றலை சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் அதிகரிப்பதற்கு இசைவாக இது முன்னெடுக்கப்படுகின்றது. அத்தோடு சிறிய அளவிலான செய்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பண உதவியும் வழங்கப்படுகின்றது என வங்கி அறிவித்துள்ளது.

மேலும் வங்கியின் பண்டாரவளை மற்றும் தெனியாய கிளைகள் அவற்றின் விவசாய மற்றும் நுண் நிதிப்பரிவுகள் (AMFU) மற்றும் வங்கியின் அபிவிருத்திக் கடன் திணைக்களம் (DCD) என்பனவற்றின் துணையோடு இந்தப் பிராந்தியங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட தேயிலைக் கழகங்களுக்கு நான்கு புவி அகழ் இயந்திரங்களையும் அன்பளிப்பாக வழங்கி உள்ளன.

இவற்றைப் பெற்றுக் கொண்டவர்களில் தெனியாய PARCIC சேதன தேயிலைக் கழகமும் ஒன்றாகும். இந்தக் கழகத்தின் தேயிலை செய்கையாளர்கள் தமது கழகத்தால் உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளையைப் பயன்படுத்தி செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடராக மொறட்டுவையில் பேராசியர் பியசேன அபேகுணவர்தனவுக்கு சொந்தமான அஹின்ஸா தேயிலை தொழில்சாலைக்கு பசுமைத் தேயிலைகள் விநியோகிக்கப்படுகின்றன. இந்நிறுவனம் உள்ளுரில் சேதனப் பசளை மூலமான தேயிலை செய்கையில் முன்னோடி நிறுவனமாகும்.

வங்கியின் திரிஷக்தி பெறுமான சங்கிலி அபிவிருத்தித் திட்டம் இதற்கு முன்னர் மட்டக்களப்பு கொக்கடிச்சோலை பாரம்பரிய அரிசி உற்பத்தியாளர்களுக்கும், முல்லைத்தீவு கால்நடை வளர்ப்பு கூட்டுறவு கழகத்துக்கும், முள்ளியாவளையில் உள்ள விவசாயிகள் குழுக்கள் பலவுக்கும் இவ்வாறான உதவிகளை வழங்கி உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .