2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘தாயகம் திரும்பும் அகதிகளின் அடிப்படை வசதிகளை அதிகரிக்கவும்’

George   / 2016 நவம்பர் 03 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், சுப்பிரமணியம் பாஸ்கரன்  

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான அடிப்படை வசதிகளை மேலும் அதிகரிக்குமாறு வலியுறுத்தி, வடமாகாண சபை உறுப்பினர் க.சிவநேசனால், சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு, கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இந்தியாவின் தமிழ் நாட்டில் மிக நீண்ட காலமாக அகதிகளாக தங்கியிருந்து, மீண்டும் தாயகம் திரும்பி வருகின்ற தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரதானமான சில பிரச்சினைகள் பற்றி, தங்களின் மேலான கவனத்துக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

2011ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதியில், 1,882 குடும்பங்களைச் சேர்ந்த 5,165 இலங்கைத் தமிழ் அகதிகள் தாயகம் திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் தமிழ் நாட்டில், பல்வேறுபட்ட பகுதிகளில் அமைந்துள்ள 108 முகாம்களிலும் வெளியிடங்களிலும் இன்னமும் 1 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள், அகதிகளாக பல்வேறுபட்ட நெருக்குதல்களுக்கு மத்தியிலும், தமது தாயகத்துக்கு மீளத்திரும்பும் கனவுகளைச் சுமந்த நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர்.

ஏற்கெனவே, தாயகம் திரும்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம், தொழில், கல்வி, காணி, வீட்டுவசதி போன்ற அடிப்படையான விடயங்களில் காணப்படக்கூடிய முன்னேற்றங்கள் மட்டுமே, தாயகம் திரும்பும் எண்ணத்தை தமிழ் நாட்டில் உள்ள எமது மக்களிடம் மேலும் வலுப்படுத்தும்.

மீள் சமூக ஒருங்கிணைப்புக்காகவும் போக்குவரத்துக்காகவும், பண உதவியாக, மொத்தம் 169 அமெரிக்க டொலர்களையும் வாழ்வாதார முயற்சிகளுக்கான உச்சத்  தொகையாக 1 இலட்சம் இலங்கை ரூபாயும், மீள்குடியேறுபவர்களுக்காக ஆறு மாத காலத்துக்கு உலர்உணவுப் பொதிகளையும் உங்கள் அமைச்சு வழங்கி வருகின்றது.

அதேவேளை, இத்தொகையை மேலும் அதிகரித்திட அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். குறிப்பாக, வாழ்வாதாரத்துக்கான உதவித்தொகையை 2 இலட்சம் ரூபாய் வரையிலும் அதிகரிக்க வேண்டும் எனவும் உலருணவு வழங்கும் காலத்தின் அளவை ஒரு வருடத்துக்கு நீடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்தியாவில் இருந்து தாயகம் திரும்புவர்கள், தமது பிள்ளைகளின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை இலங்கையில் பதிவு செய்யும் போது 25,000 ரூபாய் அறவிடப்படுகின்றது. அகதிகளாக வாழ்ந்து வெறுங்கையுடன் வருபவர்களிடம், கட்டணம் அல்லது அபராதம் அறவிடப்படும் நடைமுறை, உடனடியாக நிறுத்தப்பட்டு, அவர்களின் அகதி முகாம் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு பிறப்பு, இறப்பு பதிவுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களுடன், தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள், விசேட பிரிவாக கருதப்பட்டு ஆட்பதிவு திணைக்களத்தின் ஊடாக உடனடியாக ‘தேசிய அடையாள அட்டைகள்’ வழங்க உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தியாவில் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்றவர்களின் கல்வித் தராதரங்கள், மனிதாபிமான அடிப்படையில் கணிப்பிடப்பட்டு, இலங்கையில் தடைகள் தாமதங்கள் இன்றி கல்வியைத் தொடரவும், மதிப்பிடப்பட்டு தொழில் சந்தையில் இணையவும் பாதைகள் திறக்கப்படவேண்டும். வாழ்வாதார தொழில் முயற்சிகளுக்காக அரச வங்கிகளில் பிணைதாரர் இன்றி கடன் பெறப்படக்கூடியதான பொறிமுறை ஒன்றை, வங்கிகளுக்கு சிபாரிசு செய்யப்படவேண்டும்.

நீண்டகால இடைவெளி காரணமாக, இடம்பெயர்ந்த அகதிகளின் குடும்பங்களில், புதிதாக உருவாகியுள்ள நிலம் அற்ற உப குடும்பங்களுக்கென, சம்பந்தபட்ட மாவட்டங்களில் அரச காணிகள் இனம்காணப்பட்டு, வாழ்வாதார அல்லது விவசாய வளங்களுடன் கூடிய ‘மாதிரி குடியிருப்பு கிராமங்கள்’ ஏற்படுத்தப்பட வேண்டும்.

தாயகம் திரும்பும் அகதிகள் ஏற்கெனவே வசித்த அல்லது பயன்படுத்திய நிலங்களை மீளவும் தத்தமது ஆளுகைக்கு ஏற்படுத்திக்கொள்ள இயலுமானவாறு பொறிமுறை அமுல்படுத்தப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட அடிப்படையானதும் அவசியமானதுமான நடவடிக்கைகளை இயலுமானளவு விரைவாக முறைப்படுத்தப்பட்டதும், ஒருங்கிணைக்கப்பட்டதுமான வகையில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுமாயின், அதிகளவான தாயக உறவுகள் மீள்வருகையை நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்க முடியும்” என, அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .