2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'தனியார் கல்வி நிலையங்களை மூடுவதைத் தவிர வேறுவழியில்லை'

George   / 2016 செப்டெம்பர் 11 , பி.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என். நிபோஜன்

 

‘கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களை நிறுத்திவிடுவதற்கு தீர்மானித்துள்ளோம்” என கிளிநொச்சி தனியார் கல்வி நிலைய ஒன்றியத்தின் தலைவர் வடிவேல் நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை பிரதேச செய்தியாளர்ளை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “கரைச்சி பிரதேச சபையின் செயலாளர், பாடசாலையில் இருக்கின்ற அளவுக்கு  அடிப்படை வசதிகளை தனியார் கல்வி நிலையங்கள் கொண்டிருக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில், சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடர்ச்சியாக நிர்பந்தித்து வருகின்றார்.

இது தொடர்பில் அவரினால் தயாரிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்  அடங்கிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு பதிவு செய்து உரிமைத்தை பெறவேண்டும் என்றும் பல  தடவைகள் கடிதம் மற்றும் நேரடியான சந்திப்புகள் மூலம் நிர்பந்தித்து வருகின்றார்.

ஆனால்  அந்த நிபந்தனைகளில் பல நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே  அவற்றை தளர்த்தி எமது பிரதேசத்துக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை கொண்டுவருமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தும் அனை அவர் ஏற்றுக்கொள்ளவதாக இல்லை” என்றார்.

“கிளிநொச்சியில் உள்ள 90 சதவீதமான தனியார் கல்வி நிலையங்கள், வாடகை அல்லது குத்தகை காணிகளில் இயங்கி வருகிறன. முப்பது வருடங்களுக்கு மேலாக இவ்வாறு தனியார் கல்வி நிலையங்களை நடத்தி வருகின்றோம்.

பணத்துக்காக மட்டுமன்றி பல மாணவர்களை இலவசமாக  இணைத்துக் கொண்டுள்ளதுடன் மேலும் பல மாணவர்களை 50சதவீத கட்டண அடிப்படையிலும் அனுமதித்து கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த நிலையில், அடிப்படை வசதிகள் தொடர்பில் ஒரு பாடசாலைக்கு நிகராக தனியார் கல்வி நிலையங்களில் கோருவது நியாயமற்றது. எனவே, இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் மூடுவதனை தவிர வேறு வழியில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “யாழ். மேல் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரமும், பிரதேச சபையின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவும் தனியார் கல்வி நிலையங்களை பதிவு செய்து உரிமத்தை பெற்றுக்கொள்ளுமாறு பதிரிகைகள் ஊடாகவும் நேரடியாகவும் பல தடவைகள் கூறியிருந்தோம்.

அந்தவகையில், 17 கல்வி நிலையங்கள் பதிவு செய்து உரிமத்தை பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்களை சபையிடம் சமர்பித்திருக்கின்றார்கள். ஏனைய கல்வி நிலையங்களில் முதற்கட்டமாக சபை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காத ஒன்பது கல்வி நிலையங்களுக்கு ஏதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏனைய கல்வி நிலையங்கள் தொடர்பிலும் நாம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு  தீர்மானித்துள்ளோம்” என ​அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .