2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'தயா மாஸ்டருக்கு எதிரான குற்றப்பத்திரிகை சட்ட வலுவற்றது'

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

கடந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில், புலிகளுடன் இணைந்து, அரசாங்கத்துக்கெதிராகச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளராக இருந்த வே.தயாநிதி என்ற தயா மாஸ்டருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை, எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்க, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (06) உத்தரவிட்டார்.

இவ்வழக்கு விசாரணையின் போது, தயா மாஸ்டர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், தயா மாஸ்டருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகை, சட்டவலு அற்றது எனத் தெரிவித்தார்.

இவ்வழக்கு விசாரணையின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி கூறியதாவது,

'பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், பயங்கரவாதச் செயல்களையும் அவற்றைத் தடுப்பதற்கான விதிமுறைகள் என்றும், அவசரகால சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதிகளின் கீழ், இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த விதிகள், 2006ஆம் ஆண்டு டிசெம்பர் ஆறாம் திகதி கொண்டுவரப்பட்டபோதே, இந்த விதிகள் அடிப்படை சட்டவிதிகளுக்கு முரணானது, அரசியல் அமைப்புக்குகூட முரணானது என்ற கருத்துக்களை உள்ளுரிலும் சர்வதேசத்திலும் குரல் எழுப்பியிருந்தார்கள். ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவும், தமது நீண்ட அறிக்கையிலே, இது சாதாரண சட்ட விதிமுறைகளுக்கு முரணானது என சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

அந்தவேளையில், கடந்த அரசாங்கம் கூட இந்த விதிகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யமாட்டோம் என, ஊடகவியலாளர்களிடம் வாக்குறுதி கொடுத்திருந்தது. ஏனெனில், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரோடு தொடர்பு வைத்திருந்ததும், அந்த விதிமுறைகளின் கீழ் குற்றமாக இருந்தது.

சட்டத்தரணிகளுக்கு எதிராகக்கூட வழக்குத் தாக்கல் செய்யக்கூடிய முறையில் அது உருவாக்கப்பட்டிருந்தது. அவ்வாறாக, இதுவரையும் உபயோகிக்காத விதிமுறைகளை திடீரென்று இன்றைய காலகட்டத்தில், புது வழக்கை தாக்கல் செய்து குற்றச்சாட்டை முன்வைத்தது விசித்திரமானது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளின் கீழ், அரசியல் கைதிகளாக உள்ளவர்களை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்கின்றார். அதனை மீளாய்வு செய்கின்றார்.

முடிந்தவரையில் அவர்களை விடுவிப்பார் என்றெல்லாம் அரசாங்கம் வாக்குறுதிகளை சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், புதிதாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளை தாக்கல் செய்வது ஒரு விடயம். அதிலும் விசேடமாக, இப்படியான விதிமுறைகளுக்கு கீழே இந்த வழக்கை தாக்கல் செய்தமைக்கு என்ன காரணம் என்பது, ஒரு புரியாத புதிராக இருக்கின்றது.

எனவே, அதற்கு எதிராக அடிப்படை ஆட்சேபனையை எழுப்பும் முகமாக, இன்று நீதிமன்றத்துக்கு வந்திருந்தேன். ஆனால், அரச சட்டத்தரணி, சட்டமா அதிபர் இந்த வழக்கு சட்டக்கோவையையும் மற்ற வழக்கு கோவைகளையும் தன் கவனத்துக்கு அனுப்புமாறு எடுத்துவிட்டார் என்றும் வழக்கு கோவை நீதிமன்றத்தில் இல்லை என்றும் கூறிய காரணத்தால், இந்த வழக்கு, மீண்டும் செப்டெம்பர் 28ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இந்தக் அடிப்படை ஆட்சேபனையை, அதாவது இந்த குற்றப்பத்திரிகை சட்டவலு அற்றது ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்படவேண்டும் என்கின்ற ஆட்சேபனையை நீதிமன்றத்தில் வாதமாக வைப்பேன்' எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .