2025 ஜூலை 26, சனிக்கிழமை

இரணைதீவில் மீள்குடியேற்றம் இடம்பெற வேண்டும்: சிறிதரன் எம்.பி

Menaka Mookandi   / 2014 மே 30 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட இரணைதீவுப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியேற விருப்பம் தெரிவித்துள்ள 325 வரையிலான குடும்பங்களை மீண்டும் அப்பிரதேசத்திலேயே மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை முதல் இடம்பெற்று வருகின்றது.

கடந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட இரணைதீவுப் பகுதி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக இன்றை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், தங்களை அப்பகுதியில் தொழில் செய்வதற்கான அனுமதியினைப் பெற்றுத் தரும்படி தன்னிடம் கோரிக்கை முன்வைத்ததாக பூநகரிப் பிரதேச செயலாளர் சி.சத்தியசீலன், தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட சிறிதரன் எம்.பி, தொழில் செய்வதற்கான அனுமதி மட்டுமல்ல அப்பகுதியில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அதற்கு அம்மக்கள் விருப்பம் கொண்டுள்ளனர் என்றார்.

அத்துடன், கடற்றொழிலுடன் அப்பகுதி மக்கள் விட்டுவிட்டு வந்த அவர்களுடைய கால்நடைகளும் அங்கு இருக்கின்றன. ஆகவே அவர்களில் வாழ்வாதாரத்தினைக் கொண்டு நடத்துவதற்கு அப்பகுதி மக்களை அங்கு மீள்குடியேற்றுவதே சிறந்ததென அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X