2025 ஜூலை 14, திங்கட்கிழமை

எம்மை அழிக்க திரைமறைவில் சதிவேலைகள்: விக்னேஸ்வரன்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 07 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

'எம்மை அழிப்பதற்கு  பலவித சதி வேலைகள் திரைமறைவில் நடக்கின்றன' என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு நிலையம் வவுனியா பொது வைத்தியசாலையில் சனிக்கிழமை (6) திறந்துவைக்கப்பட்டது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'வடமாகாணம் இதுவரைகாலமும் பாதிப்புற்றவாறு இனியும் பாதிப்புக்குள்ளாக விடக்கூடாது. எமது பிழையான நடத்தைகளை, வழிமுறைகளை, சிந்தனைகளை மாற்ற நாம் முன்வரவேண்டும்.

வடமாகாண சுகாதார அமைச்சரின் சிந்தனையில் சிதறி எழுந்து மத்திய சுகாதார அமைச்சின் நிதிப்பங்களிப்புடன் இந்த இரத்தமாற்று சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 8.5 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த நிலையத்தில், ஒரே தடவையில் 06 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய வசதிகள் உள்ளன.

அண்மைய சுகாதார திணைக்களத்தின் ஆய்வு அறிக்கையின் பிரகாரம், வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்வது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலகில் தொற்றும் நோய்களால் இறப்பவர்களைவிட, தொற்றா நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இதுவரை உறுதியான முடிவேதும் மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப்படவில்லை.

எனினும் விவாசாயச் செய்கையில் கிருமிநாசினிப் பாவனை, செயற்கை உரப் பாவனை, குடிநீரிலுள்ள பாரலோகங்கள் போன்றவை இந்நோய் ஏற்படக் காரணமென எதிர்வுகூறப்படுகின்றது.

இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ள எமது பிராந்தியத்தில், மக்கள் பலவித நோய்களால் பாதிப்படைந்து வருகின்றனர் என்பது கண்கூடாகத் தெரிகின்றது. நாம் எமது பேராசையின் நிமித்தம் இப்பேர்ப்பட்ட சூழல் மாசடைவுகளை ஏற்படுத்தியுள்ளோம் என்பதை இத்தருணத்தில் நாம் மறக்கக்கூடாது.

விவசாயச் செய்கையில் கிருமிகளைக் கொல்ல எத்தனிக்கும் நாங்கள், முன்னேற்றம் காணச் செயற்கை உரத்தை பாவிக்க எத்தனிக்கும் நாங்கள்,  நாம் மரணத்தை நோக்கி   விரைவாகச் செல்ல உதவி புரிகின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை.

வெடிகுண்டுகளும் நச்சுப்புகைகளும் எமது சுற்றுச்சூழலையும் அதன்  நலத்தையும் பாதித்தன. உடனே நல்ல அறுவடையைப் பெறவேண்டும் என்பதால், நிலத்தில் நஞ்சுகளைப் பாய்ச்சினோம். அவை யாவும் கீழே சென்று அடி மட்ட நீரில்ச் சேர்ந்து கடைசியாக நாம் அருந்தும் நீரையே மாசுபடுத்துகின்றன.

நோய்களுக்கு நாம் சிகிச்சைகள் தேடும் அதேவேளையில், நாம் இதுகாறும் இழைத்த பிழைகளை இனியும் இயற்றாது இயற்கையோடு ஒன்றி வாழும் ஒரு வாழ்க்கை நிலையை அனுசரிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்பதை மறக்க வேண்டாம்.

2011ஆம் ஆண்டில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 419 ஆகும். இவர்களில் 34 பேர் இந்நோயினால் மரணத்தை தழுவியுள்ளனர்.  2012இல் 425 ஆகவும் 2013இல் 430 ஆகவுள்ள பாதிக்கப்பட்டவர்களின் தொகை இந்த ஆண்டின் 3ஆம் காலாண்டில் 443 ஐ தாண்டியுள்ளது. எனவே, எமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டால், சிறுநீரக நோயினால் பாதிக்கப்படப் போகும் நோயாளிகளின் தொகை மீண்டும் உயரக்கூடும் என்பதை எம்மக்கள் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். நாம் உங்களுக்குச் சிகிச்சையை வழங்கும் அதேநேரத்தில், மக்களாகிய நீங்கள் நோயிலிருந்து விடுபடக்கூடிய வகைகளை தெரிந்துவைத்து முன்னேற முன்வர வேண்டும். எமது வடமாகாணம் இதுகாறும் பாதிப்புற்றவாறு இனியும் பாதிப்புக்குள்ளாக விடக்கூடாது.

எமது பிழையான நடத்தைகளை, வழிமுறைகளை, சிந்தனைகளை மாற்ற நாம் முன்வர வேண்டும். எம்மை அழிக்க பலவித சதிவேலைகள் திரைமறைவில் நடக்கின்றன என்பதை அறியாத நிலையில், எம்மக்கள் வாழ்வதை பார்க்கப் பரிதாபமாக இருக்கின்றது.

நீரிலே எண்ணெய், நிலத்திலே நச்சு, பாரிலே பாவையர் பரிதவிப்பு, போதைப்பொருள் பாவனையில் ஏற்றம் இவையெல்லாம் தற்செயலாக நடக்கின்றன என்பதை என்னால் ஏற்கமுடியாது இருக்கிறது. மக்கள் தங்களை பாதுகாக்க முன்வரவேண்டும். எமது வருங்காலச் சந்ததியினர் சுகத்தோடு வாழ நாம் இன்றே சுற்றுச்சூழல் மாசுக்களைத் தவிர்க்க வேண்டும். தகாத வாழ்முறைகளைத் தடைசெய்ய வேண்டும். அதற்கு உங்கள் யாவரதும் ஒத்துழைப்பு அவசியம்'  என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .