2025 ஜூலை 14, திங்கட்கிழமை

தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை அறிவிக்குமாறு வற்புறுத்தல்: மாவை

Kanagaraj   / 2014 டிசெம்பர் 21 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்


ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் யாரை ஆதரிக்கப் போகின்றோம் என்பதை அறிவிக்குமாறு கூறி வற்புறுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத்  தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 


இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,


'ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்கப்போகின்றோம் என்பது தொடர்பில் விரைவாக அறிவிக்க வேண்டும் என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள்;  வற்புறுத்துகின்றனர்.


அத்துடன், தாம் விரைவாக தேர்தலுக்காக வேலை செய்யவேண்டும். தாம் எடுத்த முடிவை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் அதற்கான அறிவித்தலை தரவேண்டும் என்று எங்கள் அறிவித்தலை எதிர்பார்க்கின்றார்கள். 


கிழக்கு மாகாணத்தில் ஒருமித்த கருத்து வந்திருக்கின்றது. அதற்கு நாம் உடனடியாக அளித்த பதில் இந்தத் தேர்தலில் அனைவரையும் வாக்களிக்க செய்கின்ற வேலையை உடன் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றோம்.


தேர்தலை பகிஷ்கரிப்பதோ அல்லது வாக்களிக்க தவறுவதோ அது எங்களுடைய இலக்குகளை நோக்கிய பயணத்தில் பயனுள்ள செய்கையாக இருக்காது. எனவே, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தனது வாக்குப்பலத்தை நிரூபிக்கும் வகையில் ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு அங்கத்தவரும் வேலை செய்யவேண்டும் என கேட்டுள்ளோம்.


தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தலைமை அறிக்கை ஒன்றை தயாரித்துக்கொண்டிருக்கின்றது. அத்துடன், எமது தலைவர் இன்னும் சில தினங்களில் உடல் நலம் பரிசோதிக்கப்பட்டதன் பின்னர் வர இருக்கின்றார். அதன் பின்னர் அறிக்கை மீது எமது கருத்துக்களை செலுத்தி அறிக்கையை வெளியிடுவோம்.


அடுத்த வாரத்தில் அக்கருத்து வர இருக்கின்றபோது, அது வாக்காளர்களை வாக்களிக்க செய்வதும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என கூறுவதுமாக இருக்கும்' என்றார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .