2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வில்பத்து காணிகள் பிழையான முறையில் பகிரப்படவில்லை: ஹுனைஸ்

Princiya Dixci   / 2015 மே 11 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வில்பத்து சரணால காணிகள் முசலி பிரதேசத்தில் முஸ்ஸிம் மக்களுக்கு பிழையான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பொய்யான பிரசாரங்கள் பலரினால் முன்னெடுக்கப்பட்டுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.

முசலியில் இன்று திங்கட்கிழமை (11) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

வில்பத்து சரணாலயம் முசலி பிரதேசத்தில் முஸ்ஸிம் மக்களுக்கு பிழையான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பொய்யான பிரச்சாரங்கள் பலரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் முசலி பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்ற வகையிலும் அக்கருத்து பிழையான கருத்து என கூறுவது மாத்திரமின்றி குறித்த கருத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.

வில்பத்து சரணாலயத்துக்கு ஒரு எல்லை இருக்கின்றது. 'மோதரகம ஆறு' என்ற ஆறுதான் வில்பத்து சரணாலயத்துக்கான எல்லையாக உள்ளது.

ஆற்றுக்கு அப்பாற்பட்ட பிரதேசத்தில்தான் 1990ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த குடும்பமும் தற்போது இருக்கின்ற குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் குடியேற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.

இங்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பது என்பது, முறைப்படி வனப்பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான காணிகள் முறைப்படி அத்திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளரினூடாக மக்களுக்கு முறையாக கையளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அரசிற்கு சொந்தமான காணிகள், அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இங்கு வாழ்கின்ற மக்களுக்கு ½ ஏக்கர் காணி வீதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

இவை தனி முஸ்ஸிம்களுக்கு மாத்திரமல்ல. தமிழ், சிங்கள குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இதில் கடற்படையினரினாலும் இராணுவத்தினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கே அதிகளவான காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சுமார் 735 ஏக்கர் முள்ளிக்குளம் காணியும் சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட சிலாபத்துறை காணியும் அதேபோன்று சிங்கள மக்களுக்கு சொந்தமான கஜிவத்தை காணியும் படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றீடாக குறித்த இடங்களில் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக தனியார் யாருக்கும் காணிகள் வழங்கப்பட்டிருந்தால், அல்லது அவர்கள் காணிகளை அபகரித்திருந்தால் அதனை பரிசீலிப்பதும் அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து நாங்கள் ஆட்சேபனை இல்லை.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசின் அடிப்படையில் மாத்திரமே இக்காணிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .