2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மடு திருத்தல வருடாந்த ஆடித்திருவிழா தொடர்பிலான கலந்துரையாடல்

Princiya Dixci   / 2015 ஜூன் 11 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆடித்திருவிழா தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசாப்பிரிய தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (11) இடம்பெற்றது.

எதிர்வரும் ஆடி மாதம் 2ஆம் திகதி இடம்பெறவிருக்கும் மடுத் திருத்தலத்தின் திருவிழாவுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்த இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டன. 

குறிப்பாக, தேவாலய சூழலின் பாதுகாப்பு, வீதி ஒழுங்கமைப்பு, போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளடங்களாக ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன. 

அத்துடன், மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழாவுக்கான முன்னாயத்தங்கள் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் சில தினங்களில் மடு தேவாலயத்தில் இடம்பெறவுள்ளது. 

குறித்த கலந்துரையாடலில்  மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, மடுத்திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மதவிவகார அமைச்சின் கீழ் இயங்கும் கிறிஸ்தவ விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட ஏனைய அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் மன்னார் அரச தனியார் போக்குவரத்து துறையினரும் இதில் கலந்துகொண்டனர்.

உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் சிகிச்சை பெற்று வரும் மன்னார் ஆயர் அருட்கலாநிதி இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகைக்காக விசேட பிராத்தனையும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X