2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

அபுதாபியைச் சேர்ந்த பரோபகாரி உதவி

Princiya Dixci   / 2017 மே 14 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண அகதிகளின் மீள் குடியேற்றத்துக்கென, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியைச் சேர்ந்த மஹ்மூத் பேட் ஹாலி அப்துல்லாஹ் அல்ஹாஜ் என்பவர், 120 வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளார். 

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில், தனது குடும்ப உறுப்பினர்களுடன் இலங்கை வந்த அவர், முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்டங்களுக்குச் சென்று, அங்கு மீளக்குடியேறியுள்ள அகதிகளின் துன்பங்களை, நேரில் கண்டறிந்தார். 

“ஆரம்பகட்டமாக, இந்த அகதிகளின் தேவைக்காக மனிதாபிமான ரீதியில் 120 வீடுகளை அமைத்துக் கொடுக்கின்றோம். மீள்குடியேறிய மக்களுக்கு, இன்னோரன்ன தேவைகள் இருப்பதை அறிந்து கொண்டோம். இந்த மக்களுக்கு, தண்ணீர் பெரும் பிரச்சினையாக இருப்பதால், அடுத்த கட்டமாக குடிநீர் தேவைக்கென நீர் வழங்கல் திட்டமொன்றும், விவசாயம் மற்றும் வேறு பல தேவைகளுக்கும் இன்னுமொரு நீர் வழங்கல் திட்டமும் ஏற்படுத்திக் கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம்” என்று அப்துல்லாஹ் அல்ஹாஜ் தெரிவித்தார். 

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு கருத்துத் தெரிவிக்கும் போது, 

“25 வருடங்களுக்கு மேலாக துன்ப துயரங்களில் வாழும் இந்த மக்களில் பலர், இன்னும் அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனர். கொடை வள்ளல் மஹ்மூத் பேட் ஹாலி அப்துல்லாஹ்வைப் போன்ற மனித நேயம் கொண்ட பரோபகாரிகளும் பல்வேறு முஸ்லிம் நாடுகளின் அமைப்புகளும், எங்களுக்கு உதவிகளை நல்கி வருகின்றன. அவர்களின் கருணையிலும் உதவியினாலும், இந்தப் பிரதேசத்தில் பல வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 

“அத்துடன் குடிநீர் பிரச்சினையை ஓரளவு தீர்த்து வைப்பதற்கும் அவர்கள் உதவியுள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில், அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .