2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

‘இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளது’

Editorial   / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்  

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களின் படகுகள் கைப்பற்றப்பட்டு, குறித்த படகுகள் மீள வழங்கும் போது, மீண்டும் எக்காரணம் கொண்டும் இலங்கை கடற்பரப்பினுள் நுழையக்கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தபோதும், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் நுழையும் சம்பவம் அதிகரித்துள்ளதாக, வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் குற்றம் சுமத்தியுள்ளார். 

மன்னார் மாவட்ட மீனவ சமாசத்தில், இன்று (21) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், 

“இந்திய இழுவைப்படகுகளின் விடுவிப்பு தொடர்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் அனுசரணையுடன், இலங்கை அரசாங்கம், இந்திய மீனவர்களிடம் இருந்து கடந்த 2015ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட 42 படகுகளையும் விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது. 

“இதன் அடிப்படையில், எங்களுடைய ஒத்துழைப்பை நாங்கள் வழங்கியிருந்தோம். அந்த படகுகளின் விடுவிப்புக்காக, அரசாங்கத்துக்கு சில நிபந்தனைகளையும் நாங்கள் விடுத்திருந்தோம். இதில் ஒரு சில சட்டங்களை இன்று அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.  

“கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகள் விடுவிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள், மீண்டும் எக்காரணம் கொண்டும் எமது கடற்பரப்புக்குள் நுழையக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தோம். 

“எனினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர், நெடுந்தீவு கடற்பரப்பில் சுமார் 49 இந்திய மீனவர்கள் படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ச்சியாக அந்த மீனவர்களின் அத்துமீறிய வருகை நிறுத்தப்படாமல் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படுகின்றது” என்றார். 

மேலும், “புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை தளபதி ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். எதிர்காலத்தில் இந்தியத் தரப்பினர் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் போகும் சந்தர்ப்பங்கள் உள்ளன” எனவும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .