2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதி கையளிப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தொழில் நிமித்தம் கடலுக்குச் சென்று எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்த, வடமாகாணத்தைச் சேர்ந்த 29 கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, வாழ்வாதார நிதியாகத் தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

யாழ். பொதுநூலகக் கேட்போர் கூடத்தில், நேற்றுப் புதன்கிழமை (24) இடம்பெற்ற நிகழ்வில், வட மாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு, இதற்கான காசோலைகளை வழங்கிவைத்தார்.

வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சுக்காக, பனையில் இருந்து தவறி வீழ்ந்து இறந்த பனைச்சாறு உற்பத்தித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, வாழ்வாதார நிதியாக ஒரு இலட்சம் ரூபாய், கடந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு உதவியைத் தங்களுக்கும் வழங்குமாறு, கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் கோரி வந்த நிலையில், தற்போது இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு செம்டெம்பர் 21ஆம் திகதி முதல் தற்போதுவரை, கடலில் மரணம் அடைந்த கடற்றொழிலாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பரிந்துரையுடனும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்களின் பரிசீலனையின் அடிப்படையிலும், வாழ்வாதார நிதிபெறும் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் 22 குடும்பங்களும், மன்னார் மாவட்டத்தில் 06 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு குடும்பமும், தற்போது முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டு காசோலை வழங்கப்பட்டுள்ளது.

மாகாணசபை உறுப்பினர்கள் க.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .