எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2019 மார்ச் 04 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மாந்தை புனித லூர்து அன்னை ஆலயத்தின் முன்பாக அமைக்கப்படவிருந்த திருக்கேதீஸ்வரம் ஆலய நிர்வாகத்தின் நிரந்தர அலங்கார வளைவு தொடர்பாகவும், இதனோடு மன்னார் மறைமாவட்ட குருக்களை இணைத்து ஊடகங்களூடாக பரப்பப்பட்டு வரும் திரிவுபடுத்தப்பட்டுள்ளதும் உண்மைக்குப் புறப்பானதும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதுமான செய்திகள் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தினால் தெளிவுபடுத்தும் அறிக்கை ஒன்று இன்று (04) திங்கட்கிழமை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையினை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
1.மாந்தை புனித லூர்த்து அன்னை ஆலயத்திற்கு முன்னதாக சிவராத்திரி விழாவிற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவிற்கு நல்லெண்ண அடிப்படையில் நல்லிணக்கப்பாடு இருந்தது. இந்த நிலையில் இதனை உதாசீனம் செய்வது போன்று புதிதாகவும், நிரந்தரமாகவும் அலங்கார வளைவினை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மாந்தை புனித லூர்த்து அன்னை ஆலயப் பங்குத்தந்தை 02.03.2019 சனிக்கிழமை திருக்கேதீஸ்வர ஆலய சபை பொறுப்பாளர் இராமகிருஸ்ணன் மற்றும் இளைப்பாறிய அதிபர் தயானந்தராஜா ஆகியோரோடு ஒரு உரையாடலை மேற்கொண்டு ஏற்கனவே இருக்கும் தற்காலிக வளைவினை பயன்படுத்துவதென்று கலந்துரையாடப்பட்டு,அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2. இவ்வாறு இருக்க, சமயநல்லிணக்கத்திற்கு எதிராக 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 75 பேருக்கும் மேற்பட்டவர்கள் கனரக வாகனங்கள், ஏற்கனவே பொருத்தி அமைக்கப்பட்ட இரும்பினாலான அலங்கார வளைவு மற்றும் ஆயத்தம் செய்யப்பட்ட சீமெந்து கொங்கிறீட் கலவை ஆகியவற்றைக் கொண்டு வந்து. மாந்தை புனிதலூர்த்து மாதா ஆலயத்திற்கு முன்பாக ஏற்கனவே இருந்த தற்காலிக வளைவினை தாங்களாகவே உடைத்து விட்டு. புதிய அமைப்பை நிறுத்தி கொங்கிறீட் இட்டபோது அங்கு நின்ற பொது மக்களுக்கும், நிர்மாணப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந் தகுழுவினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன்போது அமைதியான முறையில் இதை அமைப்பது தொடர்பாக கலந்துரையாட முற்பட்டபோது அங்கு வளைவு அமைக்க வந்த குழுவினர் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது போல எதுவும் இடித்துக் தகர்க்கப்படவில்லை. புதிதாக பலவந்தமாக கொங்கிறீட் இட்டுப்போடப்பட்ட கம்பிகளே பிடுங்கப்பட்டது.
3. இந்த சம்பவம் நிகழும் பொழுது எந்த ஒரு அருட்பணியாளர்களும் அந்த இடத்தில் இருக்கவில்லை. இவை அனைத்தும் நிகழ்வுற்று முடிவடைந்த நிலையில் மாந்தை தூய லூர்த்து அன்னை ஆலயப் பங்குத்தந்தை ஆலய வெளிவாயிலுக்கு வந்து பிரச்சனைகளை ஆராய முற்பட்ட போது அவருக்கு எதிராக சில பிரச்சனைகள் எழுந்த படியால் அங்கிருந்தவர்கள் சிலர் இதனைஆயர் இல்லத்திற்கு தெரிவிக்க, செய்தி அறிந்தவுடன் சில அருட்பணியாளர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று மேலும் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இவ்வேளையில் அங்கு வந்த பொலிஸார் நிலைமைகளை அவதானித்து இரண்டு பிரிவினரையும் அங்கிருந்து அகன்று செல்லும் படியும், தங்கள் பிரச்சனைகளுக்கு முடிவு காண்பதாகவும் தெரிவித்தார்கள்.
4. தற்போது மேன் முறையிட்டு நீதிமன்றத்தில் மாந்தை தூய லூர்த்து அன்னை ஆலயம் அமைந்த காணிதொடர்பாக திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாக உறுப்பினர்கள் காலஞ்சென்றதிரு. நீலகண்டன், திரு.ராமகிருஷ்ணன், ஆகியோரால் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. குறித்த வழக்கிலே காணி எல்லை, திருக்கேதீஸ்வர ஆலய தற்காலிக அலங்கார வளைவு தொடர்பான விடயங்கள் தீர்மானிக்கப்பட வேண்டிய நிலையில் இவ் அலங்கார வளைவை அமைக்க புதிதாக முற்படுவது ஆரோக்கியமான விடயமல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
5. இந்த நிலைமையை அறிந்தவுடன் ஏனைய மக்களும், அருட்பணியாளர்களும் மீளவும் அங்கு ஒன்று கூடி மக்களை எந்த விதமான அசம்பாவிதங்களிலும் ஈடுபடாதவாறு அவர்கள் ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
6. இது இவ்வாறு இருக்க மீளவும் 03.03.2019 மாலை 7.30 மணியளவில் திருக்கேதீஸ்வரஆலயத்தில் இருந்து வளைவுகட்டப்படும் இடத்திற்கு மாந்தை மேற்கு பிரதேசசெயலாளர் கேதீஸ்வரனோடு வந்த குழுவினர் மீளவும் புதிய வளைவினை நிர்மானிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இவ்வேளையில் மாந்தை மேற்கு பிரதேசசெயலாளர் கேதீஸ்வரன் கத்தோலிக்க மக்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து அங்கு குழுமி இருந்தகத்தோலிக்கமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார். அவ்வேளையில் அங்கு கடமையில் இருந்த பொலிஸார் செயற்பட்டு அனைத்தையும் மிகவும் சாதுரியமாக தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்.
7. கத்தோலிக்கத்திருச்சபை பல நெடுங்காலமாக அமைதி வழித் தீர்வையே விரும்பி வருகின்றது. கத்தோலிக்கத் திருச்சபை ஒருபோதும் சமயநல்லிணக்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் இப்புனித சிவராத்திரையை அனுஷ்டிக்கும் சகல இந்துக்களுக்கும் எதுவித இடையுறும் ஏற்படாவண்ணம் நடந்து கொள்ளுமாறு தயவாகக் கேட்டுக் கொள்கின்றோம் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
38 minute ago
47 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
47 minute ago
56 minute ago
1 hours ago