2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

‘நட்சத்திர ஹோட்டல்கள் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையை அதிகரிக்கும் அதேவேளையில் கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் நட்சத்திர ஹோட்டல்கள் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம். இவ்வாறான ஹோட்டல்கள் மிகுந்த கவனத்துடன் கட்டப்பட வேண்டுமென, வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தலைமன்னார் கடற்கரைப் பூங்கா சுற்றுலா மையத்தை நேற்று (3) மாலை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“வட பகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபையின் நிதிப் பங்களிப்பாக சுமார் 10 மில்லியன் ரூபாயும் மன்னார் பிரதேச சபையின் நிதிப்பங்களிப்பு 01 மில்லியன் ரூபாயுமாக இணைந்து கிட்டத்தட்ட 11 மில்லியன் ரூபாய் செலவில் இந்த கடற்கரைப்பூங்கா அழகு படுத்தப்பட்டது.

“இப்பகுதிகளின் சீதோஷண நிலை, கடல் நீரின் தன்மை, வெள்ளை மணல் திட்டுக்கள் போன்றவை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்வன. மன்னார் மாவட்டத்தைப் பொறுத்த வரை சுற்றுலாத் தலங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

“இந்நிலையில், வெள்ளை மணல் திட்டுக்களுக்குச் செல்வதற்கு கடற்படையினரின் கட்டுப்பாடுகளை நீக்கி உதவினால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். போர் முடிந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் படையினருக்கு இனி இங்கு வேலையில்லை என்பதே எனது கருத்து. 

“வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையை அதிகரிக்கும் அதேவேளையில் கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் நட்சத்திர ஹோட்டல்கள் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம். இவ்வாறான ஹோட்டல்கள் மிகுந்த கவனத்துடன் கட்டப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பை அவதானிக்க வேண்டும். 

“மேலும், சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்பது தொடர்ச்சியான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். வெறுமனே சம்பிரதாயபூர்வமாக திறப்பு விழாக்கள் இடம்பெற்ற பின்னர் அதுபற்றி கவனம் எடுக்காது இருத்தல் பயனற்றது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .