Niroshini / 2021 ஜூலை 19 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்துக்கு, புலிக்குளம் மூலம் நீர் வழங்கலை மேற்கொள்வதற்கான விவரமான திட்டவரைபு, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவனாந்தாவிடம் சமர்ப்பிப்பதற்காக மேலதிக இணைப்பாளர் ருஷாங்கனிடம் கையளிக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகத்துக்கு, கிளிநொச்சி - அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள 568 ஏக்கர் காணியை, 2013ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசிப் பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வளாகப் பகுதிக்கான நீர்த் தேவையை நிறைவுசெய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து, அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்தை மையப்படுத்தி பல்கலைக்கழக நகர அபிவிருத்தித் திட்டம் ஒன்றும் மேற்கொள்ள ஏற்பாடாகியிருந்த நிலையில், 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக அவை கைவிடப்பட்டிருந்தன.
தற்போது மீண்டும் அறிவியல்நகர் பல்கலைக்கழக விடயத்தில் கவனம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்துக்குப் பின்புறமாக அமைந்துள்ள புலிக்குளத்தைப் புனரமைத்து, அங்கிருந்து பல்கலைக்கழக வளாகத்துக்கும், சூழவுள்ள கிராமங்களுக்கும் நீர் வழங்கல் செய்வதற்கான கோரிக்கையை, நீர்ப்பாச அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் கையளித்திருந்தார்.
இந்த வேலைத்திட்டம் பின்னர் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டதின் முன்னேற்றம் குறித்து ஜுலை 13ஆம்திகதியன்று விசேட கலந்துரையாடல் ஒன்றை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடத்தியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலிக்குளத்திலிருந்து நீரைக் கொண்டுவருவது தொடர்பான விரிவான திட்ட வரைபை வெள்ளிக்கிழமைக்குள் (16) தமக்குச் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தார்.
இதனையடுத்து, யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், அமைச்சரின் மேலதிக இணைப்பாளருமான கோ.ருஷாங்கனிடம், அறிவியல்நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக விவசாயபீட பீடாதிபதி கலாநிதி வசந்தரூபா உத்தியோகபூர்வமாக திட்டவரைபைக் கையளித்தார்.
துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் கையெழுத்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்ட வரைபில், திட்டத்தின் நோக்கம், இலக்குப் பயனாளிகள், புலிக்குளத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய கட்டுமான நடவடிக்கைகள், செலவீனங்கள் தொடர்பான விவரங்கள் உட்பட அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .