2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் படையினர் வசமுள்ள காணிகளை மீட்டுத்தருமாறு மக்கள் கோரிக்கை

Gavitha   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

2009ஆம் ஆண்டு முடிவடைந்த யுத்தத்தின் பின்னர், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களுடைய காணிகள், அரசாங்கத்தாலும் படையினராலும் திட்டமிட்டு கையகப்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின்  19 ஆயிரத்து 527 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் வசமுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1984ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட எல்லைக்கிராமங்களான கொக்குளாய், கொக்குத்தொடுவாய், மணலாறு உள்ளிட்ட கிராமங்களிலிருந்து மக்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், மகாவலி அதிகார சபையினால் தமிழ் மக்களுடைய இரண்டாயிரத்து 524 ஏக்கர் நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கோட்டைகேணி பிள்ளையார் கோவிலடியில் உப உணவு பயிர்செய்கைக்கான 825 ஏக்கர், கொக்கிளாய் விகாரை நிலம் 4 ஏக்கர், கொக்கிளாய் இல்மனைட் தொழிற்சாலைக்காக எடுக்கப்பட்டுள்ள 44 ஏக்கர், கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் சிங்கள மக்கள் உள்ள 2 ஏக்கர் காணி என 3399 ஏக்கர் மற்றும் தமிழ் மக்களுடைய விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

கருவேப்பம்முறிப்புகுளம் 201 ஏக்கர், பாலங்குளம் 150 ஏக்கர், துவரங்குளம் 200 ஏக்கர் என மொத்தமாக 1451 ஏக்கர் நிலம் ஆகியவை உள்ளடங்கலாக மொத்தமாக சுமார் 20 ஆயிரத்து 958 ஏக்கர் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அலுவலகப் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் 2012ஆம் ஆண்டு மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் தமது குடியிருப்புக் காணிகள் மாத்திரமே மீளக்கையளிக்கப்பட்டதாகவும் எனினும் பொருளாதாரத்தை பெற்றுக்கொள்ளும் விவசாயக்காணிகள், விடுவிக்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நாயாற்றில் நிந்தகைகுளம் பகுதியில் தமிழ் மக்களின் ஆளுகையில் இருந்த சுமார் 900 ஏக்கர் நிலப்பரப்பு தமக்குரியதென்ற, வனவள பாதுகாப்பு திணைக்களம் அடையாளப்படுத்தி அந்தக் காணிகளை மக்களிடம் வழங்க மறுத்து வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்திருந்தார்.

இதேவேளை தமது காணிகளில் இருந்த பயன்தரு மரங்களை அழித்துள்ள இராணுவத்தினர், காணிகளை தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கும் மக்கள் தமது பரம்பரை காணிகளை இராணுவத்திடமிருந்து மீட்டு தருமாறும் கோரிக்கை விடுகின்றனர்.

இதேவேளை கடற்படையினரும் அதிகளவான காணிகளை அபகரிப்பதால் சிங்கள குடியேற்றம் ஒன்றை நிறுவுவதற்கு முயற்சிக்கின்றார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கும் வடக்கு மாகாணசபையின் மற்றுமொரு உறுப்பினரான அன்ரனி ஜெகநாதன், இவ்வாறான திட்டமிட்ட நில அபகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

தமது விவசாயக்காணிகள் இராணுவத்தின் வசம் காணப்படுவதால் பொருளாதார ரீதியாக தாம் பல பிரச்சனைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கும் வட்டுவாகல் மக்கள், தமது காணிகளை கடற்படையினரிமிருந்து விடுவித்து தருமாறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்காக இவர்கள் பல தடவைகள் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்த போதிலும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என மக்கள் கூறுகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .