2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

மக்கள் வீதியில் நிற்க ’வாழ்வாதார வளங்கள் சுரண்டப்படுகின்றன’

George   / 2017 ஜூன் 09 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன்

“இரணைத்தீவு மக்கள் தங்களின் பூர்வீக நிலத்தில் வாழவேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மே மாதம் முதலாம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து, தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் இருக்கும் நிலையில், தீவில் உள்ள மக்களின் வாழ்வாதார வளங்கள் திருடப்பட்டு வருகின்றன” என, சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் எம்.பியுமான மு. சந்திரகுமார் தெரிவித்தார்.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை ​நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடியபோது அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இரணைத்தீவு மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு அரசியல் எல்லைகளை கடந்து அனைத்து அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும்.

“இரணைத்தீவு, ஏறக்குறைய 300 வருடங்கள் பழமை வாய்ந்த தங்களின்  ஊர் என மக்கள்  தெரிவிக்கின்றனர். ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்க கூடிய தொழில் முறைகள் மிக நீண்ட காலமாக இரணைத்தீவில் காணப்பட்டு வந்துள்ளது.

 “இந்நிலையில், அங்குள்ள மக்களின் கால்நடைகள் தற்போது திருடப்பட்டு வெளியே கொண்டு செல்லப்படுகிறன, மக்களின் காணிகளில் பறிக்கப்படுகின்ற தேங்காய்கள், வீட்டு உபகரணங்கள் என்பன  தீவில் இருந்து கடத்தப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

“இரணைத்தீவுக்குள் எங்களை அனுமதிக்க மறுக்கும் கடற்படையினர், திருட்டு கும்பல்களுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனவே, எமது மக்கள் தங்களுடைய  சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழ்வதறகான  சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும்.

மக்களின் பூர்வீக நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம், அதற்காக, மக்கள் மேற்கொள்ளும் நியாயமாக போராட்டங்களில் எப்பொழுதும் நாம் பங்காளியாகவே இருப்போம்” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .