2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மணல் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 13 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயனில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மணல் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதென அக்கிராமப் பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன.

2009இற்குப் பின்னர் அக்கராயன் ஆற்றுப்பகுதி, அக்கராயன் சுபாஸ்குடியிருப்பு, மணியங்குளத்தின் பின்பகுதி, அதன் வயல் நிலங்கள் என சகல இடங்களிலும் மணல் அகழ்வு நடைபெறுகின்றது.

நாள்தோறும் இக்கிராமத்திலிருந்து டிப்பர்களில் மணல் கொண்டு செல்லப்படுகின்றது. அக்கராயன் சுபாஸ் குடியிருப்பில் பெருமளவில் நடைபெறுகின்ற மணல் அகழ்வு காரணமாக அக்கராயன் அண்ணாசிலையடியில் இருந்து காட்டம்மன் கோவில் வீதி பெருங் குன்றுங்குழியுமாக மாறியுள்ளது. இதன் காரணமாக சுபாஸ் குடியிருப்பு மக்கள் போக்குவரத்து செய்யமுடியாதுள்ளது.

அக்கராயனிலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் மணல் அகழ்வுடன் தொடர்புபட்டுள்ளார்கள். இதன் காரணமாகவே மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக கிராம மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கிராமத்தில் வீட்டுத்திட்டங்கள் நடைபெறுகின்ற போதிலும் வீட்டுத்திட்டத்திற்கென காரணங்கள் கூறி, வெளியிடங்களுக்கு மணல் கொண்டு செல்லப்பட்டன. தற்போதும் அக்கராயன் பிரதேசத்தில் வீட்டுத்திட்டங்கள் நடைமுறையில் இல்லாத போதிலும் மணல் டிப்பர்கள் காலையிலும் மாலையிலும் இரவிலும் மணலுடன் அக்கராயன் திருமுறிகண்டி வீதி வழியாகவும் ஸ்கந்தபுரம் முக்கொம்பன் பூநகரி வழியாகவும் தொடர்ச்சியாக மணல் கொண்டு செல்லப்படுகின்றது.

அக்கராயனில் நடைபெறுகின்ற மணல் அகழ்வினை அக்கராயன் பொலிஸார் கண்டு கொள்வதில்லை. நாள்தோறும் டிப்பர்களில் மணல் கொண்டு செல்லும்போது அதனைப் பிடிப்பதுமில்லை. அக்கராயனிலிருந்து மணல் கொண்டு செல்வதற்கு யார் அனுமதி வழங்குகின்றார்கள். மணல் அகழ்வுடன் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளார்களா. அப்படி சம்பந்தப்படாவிட்டால் எவ்வாறு தொடர்ச்சியாக மணல் வெளியில் கொண்டு செல்லப்படுகின்றது எனப் பல விடயங்களுக்குப் பதில் தெரியாத நிலையில் அக்கராயனுள்ள பொது அமைப்புகள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டமொன்றினை நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

அக்கராயனில் தொடரும் மணல் அகழ்வினால் எதிர்காலத்தில் விவசாய முயற்சிகள் பாதிக்கப்படுவதுடன் உவராபத்துகள், கிணறுகளின் நீர் வற்றி குடிநீர் நெருக்கடி கூட ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்திலே குடிநீர் நெருக்கடி உள்ள கிராமமாக அக்கராயன் விளங்கும் நிலையில் தொடரும் மணல் அகழ்வினால் எதிர்காலத்தில் பாலைவனமாக அக்கராயன் மாறக்கூடிய அபாய நிலையிலேயே இப்பகுதி பொது அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .